Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

5.04 காரைக்கால் அம்மையார் புராணம்

சேக்கிழார்

1722

மானம் மிகு தருமத்தின் வழி நின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெரு வணிகர் குடி துவன்றி ஓங்கு பதி கூனல் வளை திரை சுமந்து கொண்டு ஏறி மண்டு கழிக் கானல் மிசை உலவு வளம் பெருகு திருக் காரைக்கால்

1723

வங்க மலி கடல் காரைக்காலின் கண் வாழ் வணிகர் தங்கள் குலத் தலைவனார் தனதத்தனார் தவத்தால் அங்கு அவர் பால் திரு மடந்தை அவதரித்தாள் என வந்து பொங்கிய பேர் அழகு மிகப் புனிதவதியார் பிறந்தார்

1724

வணிகர் பெரும் குலம் விளங்க வந்து பிறந்து அருளியபின் அணி கிளர் மெல் அடி தளர்வுற்று அசையும் நடைப் பருவத்தே பணி அணிவார் கழற்கு அடிமை பழகி பாங்கு பெறத் தணிவில் பெரு மனக் காதல் ததும்ப வரும் மொழி பயின்றார்

1725

பல் பெரு நற்கிளை உவப்பப் பயில் பருவச் சிறப்பு எல்லாம் செல்வ மிகு தந்தையார் திருப் பெருகும் செயல் புரிய மல்கு பெரும் பாராட்டின் வளர்கின்றார் விடையவர் பால் அல்கிய அன்புடன் அழகின் கொழுந்து எழுவது என வளர்வார்

1726

வண்டல் பயில்வன எல்லாம் வளர் மதியம் புனைந்த சடை அண்டர் பிரான் திரு வார்த்தை அணைய வருவன பயின்று தொண்டர் வரில் தொழுது தாதியர் போற்றத் துணை முலைகள் கொண்ட நுசுப்பு ஒதுங்கு பதக் கொள்கையினில் குறுகினார்

1727

நல்லவென உறுப்பு நூலவர் உரைக்கும் நலம் நிரம்பி 1 மல்கு பெரு வனப்பு மீக் கூர வரு மாட்சியினால் இல்லிகவாப் பருவத்தில் இவர்கள் மரபினுக்கு ஏற்கும் தொல் குலத்து வணிகர் மகன் பேசுதற்குத் தொடங்குவார்

1728

நீடிய சீர்க் கடல் நாகை நிதிபதி என்று உலகின் கண் பாடு பெறு புகழ் வணிகன் பயந்த குல மைந்தனுக்குத் தேடவரும் திருமரபில் சேயிழையை மகன் பேச மாட மலி காரைக்கால் வள நகரில் வரவிட்டார்

1729

வந்த மூது அறிவோர்கள் மணம் குறித்த மனை புகுந்து தந்தையாம் தனதத்தன் தனை நேர்ந்து நீ பயந்த பைந் தொடியை நிதிபதி மைந்தன் பரம தத்தனுக்கு முந்தை மரபினுக்கு ஏற்கும் முறைமை மணம் புரிக என்றார்

1730

மற்று அவனும் முறைமையினால் மணம் இசைந்து செலவு இடச் சென்று உற்றவர்கள் உரை கேட்ட நிதிபதியும் உயர் சிறப்புப் பெற்றனன் போல் உவந்து தனிப் பெரு மகட்குத் திருமலியும் சுற்றம் உடன் களி கூர்ந்து வதுவை வினைத் தொழில் பூண்டான்

1731

மணம் இசைந்த நாள் ஓலை செலவிட்டு மங்கல நாள் அணைய வதுவைத் தொழில்கள் ஆன எலாம் அமைவித்தே இணர் அலங்கல் மைந்தனையும் மண அணியின் எழில் விளக்கி பணை முரசம் எழுந்து ஆர்ப்பக் காரைக்கால் பதி புகுந்தார்

1732

அளி மிடை ஆர்த்த தன தத்தன் அணி மாடத்துள் புகுந்து தெளிதரு நூல் விதி வழியே செயல் முறைமை செய்து அமைத்துத் தளிர் அடி மென் நகை மயிலைத் தாது அவிழ் தார்க் காளைக்குக் களி மகிழ் சுற்றம் போற்றக் கலியாணம் செய்தார்கள்

1733

மங்கல மா மண வினைகள் முடித்து இயல்பின் வைகு நாள் தங்கள் குடிக்கு அரும் புதல்வி ஆதலினால் தன தத்தன் பொங்கொலி நீர் நாகையினில் போகாமே கணவன் உடன் அங்கண் அமர்ந்து இனிது இருக்க அணி மாடம் மருங்கு அமைத்தான்

1734

மகள் கொடையின் மகிழ் சிறக்கும் வரம்பில் தனம் கொடுத்து அதன்பின் நிகர்ப்பு அரிய பெரும் சிறப்பில் நிதிபதி தன் குல மகனும் தகைப்பில் பெரும் காதலினால் தங்கு மனை வளம் பெருக்கி மிகப் புரியும் கொள்கையினில் மேம் படுதல் மேவினான்

1735

ஆங்கு அவன் தன் இல்வாழ்க்கை அரும் துணையாய் அமர்கின்ற பூங்குழலார் அவர் தாமும் பொரு விடையார் திருவடிக் கீழ் ஓங்கிய அன்புறு காதல் ஒழிவு இன்றி மிகப் பெருகப் பாங்கில் வரும் மனை அறத்தின் பண்பு வழாமையில் பயில்வார்

1736

நம்பர் அடியார் அணைந்தால் நல்ல திரு அமுது அளித்தும் செம்பொன்னும் நவ மணியும் செழுந் துகிலும் முதலான தம் பரிவினால் அவர்க்குத் தகுதியின் வேண்டுவ கொடுத்தும் உம்பர் பிரான் திருவடிக் கீழ் உணர்வு மிக ஒழுகு நாள்

1737

பாங்குடைய நெறியின் கண் பயில் பரம தத்தனுக்கு மாங்கனிகள் ஓரிரண்டு வந்து அணைந்தார் சிலர் கொடுப்ப ஆங்கு அவை தான் முன் வாங்கி அவர் வேண்டும் குறை அளித்தே ஈங்கு இவற்றை இல்லத்துக்கு கொடுக்க என இயம்பினான்

1738

கணவன் தான் வர விடுத்த கனி இரண்டும் கைக் கொண்டு மணம் மலியும் மலர்க் கூந்தல் மாதரார் வைத்து அதற்பின் பண அரவம் புனைந்து அருளும் பரமனார் திருத் தொண்டர் உணவின் மிகு வேட்கை யினால் ஒருவர் மனையுள் புகுந்தார்

1739

வேதங்கள் மொழிந்த பிரான் மெய்த் தொண்டர் நிலை கண்டு நாதன் தன் அடியாரைப் பசி தீர்ப்பேன் என நண்ணிப் பாதங்கள் விளக்க நீர் முன் அளித்துப் பரிகலம் வைத்து ஏதம் தீர் நல் விருந்தாம் இன் அடிசில் ஊட்டுவார்

1740

கறி அமுதம் அங்கு உதவாதே திரு அமுது கை கூட வெறி மலர் மேல் திரு அனையார் விடையவன் தன் அடியாரே பெறல் அரிய விருந்தானால் பேறு இதன் மேல் இல்லை எனும் அறிவினராய் அவர் அமுது செய்வதனுக்கு ஆதரிப்பார்

1741

இல்லாளன் வைக்க எனத்தம் பக்கல் முன் இருந்த நல்ல நறு மாங்கனிகள் இரண்டினில் ஒன்றைக் கொண்டு வல் விரைந்து வந்து அணைந்து படைத்து மனம் மகிழ்ச்சியினால் அல்லல் தீர்ப்பவர் அடியார் தமை அமுது செய்வித்தார்

1742

மூப்புறும் அத் தளர்வாலும் முதிர்ந்து முடுகிய வேட்கைத் தீப் பசியின் நிலையாலும் அயர்ந்து அணைந்த திருத் தொண்டர் வாய்ப்புறு மென் சுவை அடிசில் மாங்கனியோடு இனிது அருந்திப் பூப்பயில் மென் குழல் மடவார் செயல் உவந்து போயினார்

1743

மற்றவர் தாம் போயின பின் மனைப் பதி ஆகிய வணிகன் உற்ற பெரும் பகலின் கண் ஓங்கிய பேர் இல் எய்திப் பொற்புற முன் நீர் ஆடிப் புகுந்து அடிசில் புரிந்து அயிலக் கற்புடைய மடவாரும் கடப் பாட்டில் ஊட்டுவார்

1744

இன் அடிசில் கறிகள் உடன் எய்தும் முறை இட்டு அதன்பின் மன்னிய சீர்க் கணவன் தான் மனை இடை முன் வைப்பித்த நல் மதுர மாங்கனியில் இருந்த அதனை நறும் கூந்தல் அன்ன மனையார் தாமும் கொடு வந்து கலத்து அளித்தார்

1745

மனைவியார் தாம் படைத்த மதுரம் மிக வாய்த்த கனி தனை நுகர்ந்த இனிய சுவை ஆராமை தார் வணிகன் இனையது ஒரு பழம் இன்னும் உளது அதனை இடுக என அனையது தாம் கொண்டு வர அணைவார் போல் அங்கு அகன்றார்

1746

அம் மருங்கு நின்று அயர்வார் அரும் கனிக்கு அங்கு என்செய்வார் மெய்ம் மறந்து நினைந்து உற்ற இடத்து உதவும் விடையவர் தான் தம் மனம் கொண்டு உணர்தலுமே அவர் அருளால் தாழ் குழலார் கைம் மருங்கு வந்து இருந்தது அதிமதுரக் கனி ஒன்று

1747

மற்றதனைக் கொடு வந்து மகிழ்ந்து இடலும் அயின்று அதனில் உற்ற சுவை அமுதினும் மேல் பட உளதாயிட இது தான் முன் தரு மாங் கனி அன்று மூவுலகில் பெறர்க்கு அரிதால் பெற்றது வேறு எங்கு என்று பெய் வளையார் தமைக் கேட்டான்

1748

அவ்வுரை கேட்டலும் மடவார் அருள் உடையார் அளித்து அருளும் செவ்விய பேர் அருள் விளம்பும் திறம் அன்று என்று உரை செய்யார் கை வரு கற்புடை நெறியால் கணவன் உரை காவாமை மெய் வழி அன்று என விளம்பல் விட மாட்டார் விதிர்ப்பு உறுவார்

1749

செய்த படி சொல்லுவதே கடன் என்னும் சீலத்தார் மை தழையும் கண்டர் சேவடிகள் மனத்து உற வணங்கி எய்தவரும் கனி அளித்தார் யார் என்னும் கணவனுக்கு மொய் தரு பூங்குழல் மடவார் புகுந்தபடி தனை மொழிந்தார்

1750

ஈசன் அருள் எனக் கேட்ட இல் இறைவன் அது தெளியான் வாச மலர்த் திரு அனையார் தமை நோக்கி மற்று இது தான் தேசுடைய சடைப் பெருமான் திருவருளேல் இன்னமும் ஓர் ஆசில் கனி அவன் அருளால் அழைத்து அளிப்பாய் என மொழிந்தான்

1751

பாங்கு அன்று மனைவியார் பணி அணிவார் தமைப் பரவி ஈங்கு இது அளித்து அருளீரேல் என் உரை பொய்யாம் என்ன மாங்கனி ஒன்று அருளால் வந்து எய்துதலும் மற்று அதனை ஆங்கு அவன் கைக் கொடுதலுமே அதிசயித்து வாங்கினான்

1752

வணிகனும் தன் கைப் புக்க மாங்கனி பின்னைக் காணான் தணிவரும் பயம் மேற்கொள்ள உள்ளமும் தடுமாறு எய்தி அணி சூழல் அவரை வேறு ஓர் அணங்கு எனக் கருதி நீங்கும் துணிவு கொண்டு எவர்க்கும் சொல்லான் தொடர்வின்றி ஒழுகு நாளில்

1753

விடுவதே எண்ணம் ஆக மேவிய முயற்சி செய்வான் படுதிரைப் பரவை மீது படர் கலம் கொண்டு போகி நெடு நிதி கொண்வேன் என்ன நிரந்தபல் கிளைஞர் ஆகும் வடுவில் சீர் வணிக மாக்கள் மரக்கலம் சமைப்பித்தார்கள்

1754

கலஞ் சமைத்து அதற்கு வேண்டும் கம்மியர் உடனே செல்லும் புலங்களில் விரும்பு பண்டம் பொருந்துவ நிரம்ப ஏற்றி சலம் தரு கடவுள் போற்றித் தலைமையாம் நாய்கன் தானும் நலம் தரு நாளில் ஏறி நளிர் திரைக் கடல் மேல் போனான்

1755

கடல் மிசை வங்கம் ஓட்டிக் கருதிய தேயம் தன்னில் அடை உறச் சென்று சேர்ந்து அங்கு அளவில் பல் வளங்கள் முற்றி இடை சில நாட்கள் நீங்க மீண்டும் அக் கலத்தில் ஏறிப் படர் புனல் கன்னி நாட்டோ ர் பட்டினம் மருங்கு சேர்ந்தான்

1756

அப் பதி தன்னில் ஏறி அலகில் பல் பொருள்கள் ஆக்கும் ஒப்பில் மா நிதியம் எல்லாம் ஒருவழிப் பெருக உய்த்து மெய்ப் புகழ் விளங்கும் அவ்வூர் விரும்பவோர் வணிகன் பெற்ற செப்பருங் கன்னி தன்னைத் திருமலி வதுவை செய்தான்

1757

பெறல் அரும் திருவினாளைப் பெரு மணம் புணர்ந்து முன்னை அறல் இயல் நறும் மென் கூந்தல் அணங்கனார் திறத்தில் அற்றம் புறம் ஒரு வெளி உறாமல் பொதிந்த சிந்தனையின் ஓடு முறைமையின் வழாமை வைகி முகம் மலர்ந்து ஒழுகும் நாளில்

1758

முருகலர் சோலை மூதூர் அதன் முதல் வணிகரோடும் இரு நிதிக் கிழவன் எய்திய திருவின் மிக்குப் பொரு கடல் கலங்கள் போக்கும் புகழினான் மனைவி தன்பால் பெருகொளி விளக்குப் போல் ஓர் பெண்கொடி அரிதில் பெற்றான்

1759

மட மகள் தன்னைப் பெற்று மங்கலம் பேணித் தான் முன்பு உடன் உறைவு அஞ்சி நீத்த ஒரு பெரு மனைவி யாரைத் தொடர் அற நினைந்து தெய்வத் தொழு குலம் என்றே கொண்டு கடன் அமைத்தவர் தம் நாமம் காதல் செய் மகவை இட்டான்

1760

இந்நிலை இவன் இங்கு எய்தி இருந்தனன் இப்பால் நீடும் கன்னி மா மதில் சூழ் மாடக் காரைக்கால் வணிகன் ஆன தன் நிகர் கடந்த செல்வத் தனதத்தன் மகளார் தாமும் மன்னிய கற்பினோடு மனை அறம் புரிந்து வைக

1761

விளை வளம் பெருக்க வங்கம் மீது போம் பரம தத்தன் வளர் புகழ்ப் பாண்டி நாட்டு ஓர் மா நகர் தன்னில் மன்னி அளவில் மா நிதியம் ஆக்கி அமர்ந்து இனிது இருந்தான் என்று கிளர் ஒளி மணிக் கொம்பு அன்னார் கிளைஞர் தாம் கேட்டார் அன்றே

1762

அம் மொழி கேட்ட போதே அணங்கனார் சுற்றத்தாரும் தம் உறு கிளைஞர்ப் போக்கி அவன் நிலை தாமும் கேட்டு மம்மர் கொள் மனத்தர் ஆகி மற்றவன் இருந்த பாங்கர் கொம்மை வெம் முலையின் ஆளை கொண்டு போய் விடுவது என்றார்

1763

மா மணிச் சிவிகை தன்னில் மட நடை மயில் அன்னாரைத் தாமரைத் தவிசில் வைகும் தனித் திரு என்ன ஏற்றிக் காமரு கழனி வீழ்த்துக் காதல் செய் சுற்றத்தாரும் தே மொழியவரும் சூழச் சேண் இடைக் கழிந்து சென்றார்

1764

சில பகல் கடந்து சென்று செம் தமிழ்த் திருநாடு எய்தி மலர் புகழ்ப் பரம தத்தன் மா நகர் மருங்கு வந்து குல முதல் மனைவியாரைக் கொண்டு வந்து அணைந்த தன்மை தொலைவில் சீர்க் கணவனார்க்குச் சொல்லி முன் செல்ல விட்டார்

1765

வந்தவர் அணைந்த மாற்றம் கேட்டலும் வணிகன் தானும் சிந்தையில் அச்சம் எய்திச் செழு மணம் பின்பு செய்த பைந் தொடி தனையும் கொண்டு பயந்த பெண் மகவின் ஒடு முந்துறச் செல்வேன் என்று மொய் குழல் அவர் பால் வந்தான்

1766

தானும் அம் மனைவி யோடும் தளிர் நடை மகவி னோடும் மான் இனம் பிணை போல் நின்ற மனைவியார் அடியில் தாழ்ந்தே யான் உமது அருளால் வாழ்வேன் இவ் இளம் குழவி தானும் பான்மையால் உமது நாமம் என்று முன் பணிந்து வீழ்ந்தான்

1767

கணவன் தான் வணங்கக் கண்ட காமர் பூங்கொடியனாரும் அணைவுறும் சுற்றத்தார் பால் அச்ச மோடு ஒதுங்கி நிற்ப உணர்வுறு கிளைஞர் வெள்கி உன் திரு மனைவி தன்னை மணம் மலி தாரினாய் நீ வணங்குவது என் கொல் என்றார்

1768

மற்றவர் தம்மை நோக்கி மானுடம் இவர் தாம் அல்லர் நற் பெரும் தெய்வம் ஆதல் நான் அறிந்து அகன்ற பின்பு பெற்ற இம் மகவு தன்னைப் பேர் இட்டேன் ஆதலாலே பொற்பதம் பணிந்தேன் நீரும் போற்றுதல் செய்மின் என்றான்

1769

என்றலும் சுற்றத்தாரும் இது என் கொல் என்று நின்றார் மன்றலங் குழலினாரும் வணிகன் வாய் மாற்றம் கேளாக் கொன்றை வார் சடையினார் தம் குரை கழல் போற்றிச் சிந்தை ஒன்றிய நோக்கில் மிக்க உணர்வு கொண்டு உரை செய்கின்றார்

1770

ஈங்கு இவன் குறித்த கொள்கை இது இனி இவனுக்கு ஆகத் தாங்கிய வனப்பு நின்ற தசைப் பொதி கழித்து இங்கு உன் பால் ஆங்கு நின் தாள்கள் போற்றும் பேய் வடிவு அடியேனுக்குப் பாங்குற வேண்டும் என்று பரமர் தாள் பரவி நின்றார்

1771

ஆன அப்பொழுது மன்றுள் ஆடுவார் அருளினாலே மேனெறி உணர்வு கூர வேண்டிற்றே பெறுவார் மெய்யில் ஊன் அடை வனப்பை எல்லாம் உதறி எற்பு உடம்பே ஆக வானமும் மண்ணும் எல்லாம் வணங்கும் பேய் வடிவம் ஆனார்

1772

மலர் மழை பொழிந்தது எங்கும் வான துந்துபியின் நாதம் உலகெலாம் நிறைந்து விம்ம உம்பரும் முனிவர் தாமும் குலவினர் கணங்கள் எல்லாம் குணலை இட்டன முன் நின்ற தொலைவில் பல் சுற்றத்தாரும் தொழுது அஞ்சி அகன்று போனார்

1773

உற் பவித்து எழுந்த ஞானத்து ஒருமையின் உமை கோன் தன்னை அற் புதத் திரு அந்தாதி அப்பொழுது அருளிச் செய்வார் பொற்புடைச் செய்ய பாத புண்ட ரீகங்கள் போற்றும் நற் கணத்தினில் ஒன்று ஆனேன் நான் என்று நயந்து பாடி

1774

ஆய்ந்த சீர் இரட்டை மாலை அந்தாதி எடுத்துப் பாடி ஏய்ந்த பேர் உணர்வு பொங்க எயில் ஒரு மூன்றும் முன்னாள் காய்ந்தவர் இருந்த வெள்ளிக் கைலை மால் வரையை நண்ண வாய்ந்த பேர் அருள் முன் கூற வழி படும் வழியால் வந்தார்

1775

கண்டவர் வியப்புற்று அஞ்சிக் கை அகன்று ஓடுவார்கள் கொண்டது ஓர் வேடத் தன்மை உள்ளவாறு கூறக் கேட்டே அண்ட நாயகனாரென்னை அறிவரேல் அறியா வாய்மை எண் திசை மக்களுக்கு யான் எவ்வுருவாய் என் என்பார்

1776

வட திசை தேசம் எல்லாம் மனத்தினும் கடிது சென்று தொடை அவிழ் இதழி மாலைச் சூல பாணியனார் மேவும் படர் ஒளிக் கைலை வெற்பின் பாங்கு அணைந்து ஆங்குக் காலின் நடையினைத் தவிர்த்து பார் மேல் தலையினால் நடந்து சென்றார்

1777

தலையினால் நடந்து சென்று சங்கரன் இருந்த வெள்ளி மலையின் மேல் ஏறும் போது மகிழ்ச்சியால் அன்பு பொங்கக் கலை இளம் திங்கள் கண்ணிக் கண் நுதல் ஒரு பாகத்துச் சிலை நுதல் இமய வல்லி திருக் கண் நோக்குற்றது அன்றே

1778

அம்பிகையின் திருவுள்ளத்தின் அதிசயித்து அருளித் தாழ்ந்து தம் பெருமானை நோக்கித் தலையினால் நடந்து இங்கு ஏறும் எம் பெருமான் ஓர் எற்பின் யாக்கை அன்பு என்னே என்ன நம் பெரு மாட்டிக்கு அங்கு நாயகன் அருளிச் செய்வான்

1779

வரும் இவன் நம்மைப் பேணும் அம்மை காண் உமையே மற்று இப் பெருமை சேர் வடிவம் வேண்டிப் பெற்றனள் என்று பின்றை பெருகு வந்து அணைய நோக்கி அம்மையே என்னும் செம்மை ஒரு மொழி உலகம் எல்லாம் உய்யவே அருளிச் செய்தார்

1780

அங்கணன் அம்மையே என்று அருள் செய அப்பா என்று பங்கயச் செம் பொன் பாதம் பணீந்து வீழ்ந்து எழுந்தார் தம்மைச் சங்க வெண் குழையினாரும் தாம் எதிர் நோக்கி நம்பால் இங்கு வேண்டுவது என் என்ன இறைஞ்சி நின்று இயம்பு கின்றார்

1781

இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டு கின்றார் பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும் மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்

1782

கூடு மாறு அருள் கொடுத்துக் குலவு தென் திசையில் என்றும் நீடு வாழ் பழன மூதூர் நிலவிய ஆலம் காட்டில் ஆடும் மா நடமும் நீ கண்டு ஆனந்தம் சேர்ந்து எப்போதும் பாடுவாய் நம்மை பரவுவார் பற்றாய் நின்றான்

1783

அப் பரிசு அருளப் பெற்ற அம்மையும் செம்மை வேத மெய்ப் பொருள் ஆனார் தம்மை விடை கொண்டு வணங்கிப் போந்து செப்பரும் பெருமை அன்பால் திகழ் திரு ஆலம் காடாம் நற் பதி தலையினாலே நடந்து புக்கு அடைந்தார் அன்றே

1784

ஆலங்காடு அதனில் அண்டமுற நிமிர்ந்து ஆடுகின்ற கோலம் காண் பொழுது கொங்கை திரங்கி என்று எடுத்து அங்கு மூலம் காண்பரியார் தம்மை மூத்த நல் பதிகம் பாடி ஞாலம் காதலித்துப் போற்றும் நடம் போற்றி நண்ணும் நாளில்

1785

மட்டவிழ் கொன்றையினார் தம் திருக்கூத்து முன் வணங்கும் இட்ட மிகு பெருங் காதல் எழுந்து ஓங்க வியப்பு எய்தி எட்டி இலவம் மீகை என எடுத்துத் திருப் பதிகம் கொட்ட முழவம் குழகன் ஆடும் எனப் பாடினார்

1786

மடுத்த புனல் வேணியினார் அம்மை என மதுர மொழி கொடுத்து அருளப் பெற்றாரைக் குலவிய தாண்டவத்தில் அவர் எடுத்து அருளும் சேவடிக் கீழ் என்றும் இருக்கின்றாரை அடுத்த பெரும் சீர் பரவல் ஆர் அளவாயினது அம்மா

1787

ஆதியோடு அந்தம் இல்லான் அருள் நடம் ஆடும் போது கீதம் முன் பாடும் அம்மை கிளர் ஒளி மலர்த்தாள் போற்றிச் சீத நீர் வயல் சூழ் திங்களூரில் அப்பூதியாராம் போத மா முனிவர் செய்த திருத் தொண்டு புகலல் உற்றேன்