Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

5.06 திரு நீல நக்க நாயனார் புராணம்

சேக்கிழார்

1833

பூத்த பங்கயப் பொகுட்டின் மேல் பொருகயல் உகளும் காய்த்த செந் நெலின் காடு சூழ் காவிரி நாட்டுச் சாத்த மங்கை என்று உலகு எலாம் புகழ் உறும் தகைத்தால் வாய்த்த மங்கல மறையவர் முதற்பதி வனப்பு

1834

நன்மை சாலும் அப்பதி இடை நறு நுதல் மடவார் மென் மலர்த் தடம் படிய மற்றவருடன் விரவி அன்னம் முன் துறை ஆடுவ பாடுவ சாமம் பன் மறைக் கிடையுடன் பயிற்றுவ பல பூவை

1835

ஆய்ந்த மெய்ப் பொருள் நீறு என வளர்க்கும் அக் காப்பில் ஏய்ந்த மூன்று தீ வளர்த்துளார் இரு பிறப்பாளர் நீந்து நல் அறம் நீர்மையின் வளர்க்கும் அத்தீயை வாய்ந்த கற்புடன் நான்கு என வளர்ப்பர் கண் மடவார்

1836

சீலம் உய்த்த அத் திருமறையோர் செழு மூதூர் ஞாலம் மிக்க நான் மறைப் பொருள் விளக்கிய நலத்தார் ஆலம் வைத்த கண்டத்தவர் தொண்டராம் அன்பர் நீல நக்கனார் என்பவர் நிகழ்ந்துளார் ஆனார்

1837

வேத உள்ளுறை ஆவன விரிபுனல் வேணி நாதர் தம்மையும் அவர் அடியாரையும் நயந்து பாதம் அர்ச்சனை புரிவதும் பணிவதும் என்றே காதலால் அவை இரண்டுமே செய் கருத்து உடையார்

1838

மெய்த்த ஆகம விதி வழி வேத காரணரை நித்தல் பூசனை புரிந்து எழு நியமும் செய்தே அத்தர் அன்பருக்கு அமுது செய்விப்பது முதலா எத் திறத்தன பணிகளும் ஏற்று எதிர் செய்வார்

1839

ஆய செய் கையில் அமரும் நாள் ஆதிரை நாளில் மேய பூசனை நியதியை விதியினால் முடித்துத் தூய தொண்டனார் தொல்லை நீடு அயவந்தி அமர்ந்த நாயனாரையும் அருச்சனை புரிந்திட நயந்தார்

1840

உறையுள் ஆகிய மனை நின்றும் ஒருமை அன்புற்ற முறைமையால் வரு பூசைக்கும் முற்ற வேண்டுவன குறைவறக் கொண்டு மனைவியார் தம்மொடும் கூட இறைவர் கோயில் வந்து எய்தினர் எல்லையில் தவத்தோர்

1841

அணைய வந்து புக்கு அயவந்தி மேவிய அமுதின் துணை மலர்க் கழல் தொழுது பூசனை செயத் தொடங்கி இணைய நின்று அங்கு வேண்டு மனைவியார் ஏந்த உணர்வின் மிக்கவர் உயர்ந்த அர்ச்சனை முறை உய்த்தார்

1842

நீடு பூசனை நிரம்பியும் அன்பினால் நிரம்பார் மாடு சூழ் புடை வலம் கொண்டு வணங்கி முன் வழுத்தித் தேடு மா மறைப் பொருளினைத் தெளிவுற நோக்கி நாடும் அஞ்செழுத்து உணர்வுற இருந்து முன் நவின்றார்

1843

தொலைவில் செய் தவத் தொண்டனார் சுருதியே முதலாம் கலையின் உண்மையாம் எழுத்து அஞ்சும் கணிக்கின்ற காலை நிலையின் நின்று முன் வழுவிட நீண்ட பொன் மேருச் சிலையினார் திருமேனி மேல் விழுந்தது ஓர் சிலம்பி

1844

விழுந்த போதில் அங்கு அயல் நின்ற மனைவியார் விரைவுற்று எழுந்த அச்சமோடு இளம் குழவியில் விழும் சிலம்பி ஒழிந்து நீங்கிட ஊதி முன் துமிப்பவர் போலப் பொழிந்த அன்பினால் ஊதி மேல் துமிந்தனர் போக

1845

பதைத்த செய்கையால் மனைவியார் முன் செயப் பந்தம் சிதைக்கு மா தவத் திரு மறையவர் கண்டு தம் கண் புதைத்து மற்றிது செய்தது என் பொறி இலாய் என்னச் சுதைச் சிலம்பி மேல் விழ ஊதித் துமிந்தனன் என்றார்

1846

மனைவியார் செய்த அன்பினை மனத்தினில் கொள்ளார் புனையும் நூல் மணி மார்பர் தம் பூசனைத் திறத்தில் இனைய செய்கை இங்கு அநுசிதமாம் என எண்ணும் நினைவினால் அவர் தம்மை விட்டு அகன்றிட நீப்பார்

1847

மின் நெடுஞ்சடை விமலர் மேல் விழுந்த நூல் சிலம்பி தன்னை வேறு ஒரு பரிசினால் தவிர்ப்பது தவிர முன் அனைந்து வந்து ஊதி வாய் நீர்ப் பட முயன்றாய் உன்னை யான் இனித் துறந்தனன் ஈங்கு என உரைத்தார்

1848

மற்ற வேலையில் கதிரவன் மலைமிசை மறைந்தான் உற்ற ஏவலின் மனைவியார் ஒருவழி நீங்க முற்ற வேண்டுவ பழுது தீர் பூசனை முடித்துக் கற்றை வேணியார் தொண்டரும் கடிமனை புகுந்தார்

1849

அஞ்சும் உள்ளமோடு அவர் மருங்கு அணைவுற மாட்டார் நஞ்சம் உண்டவர் கோயிலில் நங்கையார் இருந்தார் செஞ்சொல் நான் மறைத் திரு நீல நக்கர்தாம் இரவு பஞ்சின் மெல் அணைப் பள்ளியில் பள்ளி கொள்கின்றார்

1850

பள்ளி கொள் பொழுது தயவந்திப் பரமர் தாம் கனவில் வெள்ள நீர்ச் சடையொடு நின்று மேனியைக் காட்டி உள்ளம் வைத்து எமை ஊதி முன் துமிந்த பால் ஒழியக் கொள்ளும் இப் புறம் சிலம்பியின் கொப்புள் என்று அருள

1851

கண்ட அப்பெரும் கனவினை நனவு எனக் கருதிக் கொண்ட அச்சமோடு அஞ்சலி குவித்து உடன் விழித்துத் தொண்டனார் தொழுது ஆடினார் பாடினார் துதித்தார் அண்டர் நாயகர் கருணையைப் போற்றி நின்று அழுதார்

1852

போது போய் இருள் புலர்ந்திடக் கோயில் உள் புகுந்தே ஆதி நாயகர் அயவந்தி அமர்ந்த அங்கணர்தம் பாத மூலங்கள் பணிந்து வீழ்ந்து எழுந்து முன் பரவி மாதராரையும் கொண்டு தம் மனையில் மீண்டு அணைந்தார்

1853

பின்பு முன்னையில் பெருகிய மகிழ்ச்சி வந்துஎய்த இன்புறும் திறத்து எல்லையில் பூசனை இயற்றி அன்பு மேம் படும் அடியவர் மிக அணை வார்க்கு முன்பு போல் அவர் வேண்டுவ விருப்ப முடன் முடிப்பார்

1854

அன்ன தன்மையில் அமர்ந்து இனிது ஒழுகும் அந்நாள்ல் மன்னு பூம் தராய் வரு மறைப் பிள்ளையார் பெருமை பன்னி வையகம் போற்றிட மற்று அவர் பாதம் சென்னி வைத்து உடன் சேர்வுறும் விருப்பினால் சிறந்தார்

1855

பண்பு மேம்படு நிலைமையார் பயிலும் அப்பருவ மண் பெரும் தவப் பயன் பெற மருவு நல் பதிகள் விண் பிறங்கு நீர் வேணியார் தமைத் தொழ அணைவார் சண்பை மன்னரும் சாத்த மங்கையில் வந்து சார்ந்தார்

1856

நீடு சீர்த் திரு நீலகண்டப் பெரும் பாணர் தோடுலாங் குழல் விறலியார் உடன் வரத் தொண்டர் கூடும் அப் பெரும் குழாத்தோடும் புகலியர் பெருமான் மாடு வந்தமை கேட்டு உளம் மகிழ் நீல நக்கர்

1857

கேட்ட அப் பொழுதே பெரு மகிழ்ச்சியில் கிளர்ந்து தோட்டலங்கலும் கொடிகளும் புனைந்து தோரணங்கள் நாட்டி நீள் நடைக் காவணம் இட்டு நல் சுற்றத்து ஈடமும் கொடு தாமும் முன் எதிர் கொள எழுந்தார்

1858

சென்று பிள்ளையார் எழுந்து அருளும் திருக் கூட்டம் ஒன்றி அங்கு எதிர் கொண்டு தம் களிப்பினால் ஒருவாறு அன்றி ஆடியும் பாடியும் தொழுது எழுந்து அணைவார் பொன் தயங்கு நீள் மனை இடை உடன் கொண்டு புகுந்தார்

1859

பிள்ளையார் எழுந்து அருளிய பெருமைக்குத் தக்க வெள்ளம் ஆகிய அடியவர் கூட்டமும் விரும்ப உள்ளம் ஆதரவு ஓங்கிட ஓங்கு சீகாழி வள்ளலாரைத் தம் மனை இடை அமுது செய்வித்தார்

1860

அமுது செய்த பின் பகலவன் மேல் கடல் அணையக் குமுத வாவியில் குளிர் மதிக் கதிர் அணை போதில் இமய மங்கை தன் திருமுலை அமுது உண்டார் இரவும் தமது சீர் மனைத் தங்கிட வேண்டுவ சமைத்தார்

1861

சீல மெய்த் திருத் தொண்டரோடு அமுது செய்து அருளி ஞாலம் மிக்கிட நாயகி உடன் நம்பர் நண்ணும் காலம் முற்பெற அழுதவர் அழைத்திடக் கடிது நீல நக்கனார் வந்து அடி பணிந்து முன் நின்றார்

1862

நின்ற அன்பரை நீல கண்டப் பெரும் பாணர்க்கு இன்று தங்க ஓர் இடம் கொடுத்து அருளுவீர் என்ன நன்றும் இன்புற்று நடு மனை வேதியின் பாங்கர்ச் சென்று மற்று அவர்க்கு இடம் கொடுத்தனர் திருமறையோர்

1863

ஆங்கு வேதியில் அறாத செம் தீ வலம் சுழிவுற்று ஓங்கி முன்னையில் ஒரு படித்து அன்றியே ஒளிர தாங்கு நூலவர் மகிழ் உறச் சகோட யாழ்த் தலைவர் பாங்கு பாணியார் உடன் அருளால் பள்ளி கொண்டார்

1864

கங்குலில் பள்ளி கொண்ட பின் கவுணியர்க்கு இறைவர் அங்கு நின்று எழுந்து அருளுவார் அயவந்தி அமர்ந்த திங்கள் சூடியை நீல நக்கரைச் சிறப்பித்தே பொங்கு செந்தமிழ் திருப்பதிகத் தொடை புனைந்தார்

1865

பதிக நான் மலர் கொண்டு தம்பிரான் கழல் பரவி அதிக நண்பினை நீல நக்கருக்கு அளித்து அருளி எதிர் கொளும் பதிகளில் எழுந்து அருளினார் என்றும் புதிய செந்தமிழ்ப் பழ மறை மொழிந்த பூசுரனார்

1866

பிள்ளையார் எழுந்து அருள அத்தொண்டர் தாம் பின்பு தள்ளும் அன்புடன் கேண்மையும் தவிர்ப்பில எனினும் வள்ளலார் திரு அருளினை வலிய மாட்டாமை உள்ளம் அங்கு உடன் போக்கி மீண்டு ஒரு வகை இருந்தார்

1867

மேவு நாளில் அவ் வேதியர் முன்பு போல் விரும்பும் தாவில் பூசனை முதல் செய்கை தலைத்தலை சிறப்பச் சேவின் மேலவர் மைந்தராம் திரு மறைச் சிறுவர் பூவடித் தலம் பொருந்திய உணர்வொடும் பயின்றார்

1868

சண்பை ஆளியார் தாம் எழுந்து அருளும் எப் பதியும் நண்பு மேம்பட நாள் இடைச் செலவிட்டு நண்ணி வண் பெரும் புகழவர் உடன் பயின்று வந்து உறைந்தார் திண் பெரும் தொண்டர் ஆகிய திரு நீலக்கர்

1869

பெருகு காதலில் பின் நெடு நாள் முறை பிறங்க வருபெரும் தவ மறையவர் வாழி சீகாழி ஒருவர் தம் திருக் கல்லியாணத்தினில் உடனே திருமணத் திறம் சேவித்து நம்பர் தாள் சேர்ந்தார்

1870

தரு தொழில் திரு மறையவர் சாத்த மங்கையினில் வருமுதல் பெரும் திருநீல நக்கர் தாள் வணங்கி இரு பிறப்புடை அந்தணர் ஏறுயர்த்தவர் பால் 1865-3 ஒருமை உய்த்துணர் நமி நந்தியார் தொழில் உரைப்பாம்