Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

8.03 நரசிங்க முனையரைய நாயனார் புராணம்

சேக்கிழார்

3983

கோடாத நெறி விளக்கும் குலமரபின் அரசு அளித்து மாடாக மணி கண்டர் திருநீறே மனம் கொள்வார் தேடாத பெருவளத்தில் சிறந்த திருமுனைப் பாடி நாடாளும் காவலனார் நரசிங்க முனையரையர்

3984

இம்முனையர் பெருந்தகையார் இருந்து அரசு புரந்து போய்த் தெம் முனைகள் பல கடந்து தீங்கு நெறிப் பாங்கு அகல மும்முனை நீள் இலைச் சூல முதல் படையார் தொண்டுபுரி அம் முனைவர் அடி அடைவே அரும் பெரும் பேரு என அடைவார்

3985

சின விடையார் கோயில் தொறுந் திருச் செல்வம் பெருக்குநெறி யனஇடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து மனவிடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு கனவிடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார்

3986

ஆறு அணிந்த சடை முடியார்க்கு ஆதிரை நாள் தொறும் என்றும் வேறு நிறை வழிபாடு விளக்கிய பூசனை மேவி நீறு அணியும் தொண்டர் அணைந்தார்க்கு எல்லாம் நிகழ் பசும் பொன் நூறு குறையாமல் அளித்து இன் அமுது நுகர்விப்பார்

3987

ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில் மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில் மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்

3988

மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்குள்ளார் உற்ற இகழ்ச்சியராகி ஒதுங்குவார் தமைக் கண்டு கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்தப் பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார்

3989

சீலம் இலரே எனினும் திருநீறு சேர்ந்தாரை ஞாலம் இகழ்ந்த அருநரகம் நண்ணாமல் எண்ணுவார் பாலணைந்தார் தமக்கு அளித்தபடி இரட்டிப் பொன் கொடுத்து மேலவரைத் தொழுது இனிய மொழி விளம்பி விடை கொடுத்தார்

3990

இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும் செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப் பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சோர்ந்து மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார்

3991

விட நாகம் அணிந்த பிரான் மெய்த்தொண்டு விளைந்த நிலை உடனாகும் நரசிங்க முனையர் பிரான் கழல் ஏத்தித் தடநாகம் மதம் சொரியத் தனம் சொரியும் கலம் சேரும் கடனாகை அதிபத்தர் கடனாகைக் கவின் உரைப்பாம்