Skip to content
Periya Puranam

பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்

9.04 வாயிலார் நாயனார் புராணம்

சேக்கிழார்

4079

சொல் விளங்கு சீர்த் தொண்டைநல் நாட்டின் இடை மல்லல் நீடிய வாய்மை வளம்பதி பல்பெரும் குடி நீடு பரம்பரைச் செல்வம் மல்கு திருமயிலா புரி

4080

நீடு வேலை தன் பால் நிதி வைத்திடத் தேடும் அப்பெரும் சேம வைப்பாம் என ஆடு பூங்கொடி மாளிகை அப்பதி மாடு தள்ளும் மரக்கலச் செப்பினால்

4081

காலம் சொரிந்த கரிக்கருங்கன்று முத்து அலம்பு முந்நீர் படிந்து அணை மேகமும் நலம் கொள் மேதி நல் நாகும் தெரிக்க ஒணா சிலம்பு தெண்திரைக் கானலின் சேண் எலாம்

4082

தவள மாளிகைச் சாலை மருங்கு இறைத் துவள் பதாகை நுழைந்து அணை தூமதி பவள வாய் மடவார் முகம் பார்த்து அஞ்சி உவளகம் சேர்ந்து ஒதுங்குவது ஒக்குமால்

4083

வீதி எங்கும் விழா அணிக் காளையர் தூது இயங்கும் சுரும்பு அணி தோகையர் ஓதி எங்கும் ஒழியா அணிநிதி பூதி எங்கும் புனை மணிமாடங்கள்

4084

மன்னு சீர் மயிலைத் திரு மாநகர்த் தொன்மை நீடிய சூத்திரத் தொல் குல நன்மை சான்ற நலம் பெறத் தோன்றினார் தன்மை வாயிலார் என்னும் தபோதனர்

4085

வாயிலார் என நீடிய மாக்குடித் தூய மா மரபின் முதல் தோன்றியே நயனார் திருத்தொண்டின் நயப்புறு மேய காதல் விருப்பின் விளங்குவார்

4086

மறவாமையான் அமைத்த மனக்கோயிலுள் இருத்தி உறவாதிதனை உணரும் ஒளி விளக்குச் சுடர் ஏற்றி இறவாத ஆனந்தம் எனும் திருமஞ்சனம் ஆட்டி அறவாணர்க்கு அன்பு என்னும் அமுது அமைத்து அர்ச்சனை செய்வார்

4087

அகம் மலர்ந்த அர்ச்சனையில் அண்ணலார் தமை நாளும் நிகழ வரும் அன்பினால் நிறை வழிபாடு ஒழியாமே திகழ நெடுநாள் செய்து சிவபெருமான் அடிநிழல் கீழ்ப் புகல் அமைத்துத் தொழுது இருந்தார் புண்ணிய மெய்த் தொண்டனார்

4088

நீராருஞ் சடையாரை நீடுமன ஆலயத்துள் ஆராத அன்பினால் அருச்சனை செய்து அடியவர்பால் பேராத நெறி பெற்ற பெருந் தகையார் தமைப்போற்றிச் சீர் ஆரும் திரு நீடூர் முனையடுவார் திறம் உரைப்பாம்