ஆதாரமாய் அனைத்தும் ஆகி நின்ற அங்கணன் எம் பெருமான் நீர் அணிந்த வேணிக்
பன்னிரண்டாம் திருமுறை – பெரிய புராணம்
11.06 முழுநீறு பூசிய முனிவர் புராணம்
சேக்கிழார்
காதார் வெண் திருக் குழையான் அருளிச் செய்த
கற்பம் அநு கற்பம் உப கற்பம் தான் ஆம் ஆகாது என்று அங்கு உரைத்த அகற்பம் நீக்கி ஆமென்று முன் மொழிந்த மூன்று பேதம் மோகாதி குற்றங்கள் அறுக்கும் நீற்றை மொழிவது நம் இரு வினைகள் கழிவதாக
அம்பலத்தே உலகுய்ய ஆடும் அண்ணல் உவந்து ஆடும் அஞ்சினையும் அளித்த ஆக்கள் இம்பர் மிசை அநா மயமாய் இருந்த போதில் ஈன்று அணிய கோமய மந்திரத்தினால் ஏற்று உம்பர் தொழ எழும் சிவ மந்திர ஓமத்தால் உற்பவித்த சிவாங்கிதனில் உணர்வுக்கு எட்டா எம்பெருமான் கழல் நினைந்து அங்கிட்ட தூ நீறு இது கற்பம் என்று எடுத்து இங்கு ஏத்தல் ஆகும்
ஆறணியத்து உலர்ந்த கோமயத்தை கைக்கொண்டு அழகு உற நுண் பொடி ஆக்கி ஆவின் சுத்த நீரணிவித்து தந்திர மந்திரத்தினாலே நிசயம் உறப் பிடித்து ஓம நெருப்பில் இட்டுச் சீரணியும்படி வெந்து கொண்ட செல்வத் திருநீறாம் அநு கற்பம் தில்லை மன்றுள் வாரணியும் முலை உமையாள் காண ஆடும் மாணிக்கக் கூத்தர் மொழி வாய்மை யாலே
அடவி படும் அங்கியினில் வெந்த நீறும் ஆனிலைகள் அனல் தொடக்க வெந்த நீறும் இட வகைகள் எரி கொளுவ வெந்த நீறும் இட்டி கைகள் சுட்ட எரி பட்ட நீறும் உடன் அன்றி வெவ்வேறே ஆவின் நீரால் உரை திகழும் மந்திரம் கொண்டு உண்டையாக்கி மடம் அதனில் பொலிந்து இருந்த சிவ அங்கி தன்னால் வெந்தது மற்று உபகற்பம் மரபின் ஆகும்
இந்த வகையால் அமைத்த நீறு கொண்டே இரு திறமும் சுத்தி வரத் தெறித்த பின்னர் அந்தம் இலா அரன் அங்கி ஆறு மெய்ம்மை அறிவித்த குரு நன்மை அல்லாப் பூமி முந்த எதிர் அணியாதே அணியும் போது முழுவதும் மெய்ப் புண்டரம் சந்திரனில் பாதி நந்தி எரி தீபம் நிகழ் வட்டம் ஆக நாதர் அடியார் அணிவர் நன்மையாலே
சாதியினில் தலை ஆன தரும சீலர் தத்துவத்தின் நெறி உணர்ந்தோர் தங்கள் கொள்கை நீதியினில் பிழையாது நெறியில் நிற்போர் நித்த நியமத்து நிகழ் அங்கி தன்னில் பூதியினைப் புதிய ஆசனத்துக் கொண்டு புலி அதளின் உடையானைப் போற்றி நீற்றை ஆதிவரும் மும்மலமும் அறுத்த வாய்மை அரு முனிவர் முழுவதும் மெய் அணிவர் அன்றே