திருக்கள்ளில் பண் - வியாழக்குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.119 திருக்கள்ளில்
திருஞானசம்பந்தர்
முள்ளின்மேல் முதுகூகை முரலுஞ் சோலை வெள்ளின்மேல் விடுகூறைக் கொடி விளைந்த கள்ளில்மேய அண்ணல் கழல்கள் நாளும் உள்ளுமேல் உயர்வெய்தல் ஒரு தலையே.
ஆடலான் பாடலான் அரவங்கள் பூண்டான் ஓடலாற் கலனில்லான் உறை பதியால் காடலாற் கருதாத கள்ளில் மேயான் பாடெலாம் பெரியார்கள் பரசு வாரே.
எண்ணார்மும் மதிலெய்த இமையா முக்கண் பண்ணார்நான் மறைபாடும் பரம யோகி கண்ணார் நீறணிமார்பன் கள்ளில் மேயான் பெண்ணாணாம் பெருமானெம் பிஞ்ஞ கனே.
பிறைபெற்ற சடையண்ணல் பெடைவண் டாலும் நறைபெற்ற விரிகொன்றைத் தார் நயந்த கறைபெற்ற மிடற்றண்ணல் கள்ளில் மேயான் நிறைபெற்ற அடியார்கள் நெஞ்சு ளானே.
விரையாலும் மலராலும் விழுமை குன்றா உரையாலு மெதிர்கொள்ள வூரா ரம்மாக் கரையார்பொன் புனல்வேலிக் கள்ளில் மேயான் அரையார்வெண் கோவணத்த அண்ணல் தானே.
நலனாய பலிகொள்கை நம்பான் நல்ல வலனாய மழுவாளும் வேலும் வல்லான் கலனாய தலையோட்டான் கள்ளில் மேயான் மலனாய தீர்த்தெய்தும் மாதவத் தோர்க்கே.
பொடியார்மெய் பூசினும் புறவின் நறவங் குடியாவூர் திரியினுங் கூப்பி டினுங் கடியார்பூம் பொழிற்சோலைக் கள்ளில் மேயான் அடியார்பண் பிகழ்வார்கள் ஆதர் களே.
திருநீல மலரொண்கண் தேவி பாகம் புரிநூலுந் திருநீறும் புல்கு மார்பில் கருநீல மலர்விம்மு கள்ளி லென்றும் பெருநீல மிடற்றண்ணல் பேணு வதே.
வரியாய மலரானும் வையந் தன்னை உரிதாய அளந்தானும் உள்ளு தற்கங் கரியானும் அறியாத கள்ளில் மேயான் பெரியானென் றறிவார்கள் பேசு வாரே.
ஆச்சியப் பேய்களோ டமணர் குண்டர் பேச்சிவை நெறியல்ல பேணு மின்கள் மாச்செய்த வளவயல் மல்கு கள்ளில் தீச்செய்த சடையண்ணல் திருந் தடியே.
திகைநான்கும் புகழ்காழிச் செல்வம் மல்கு பகல்போலும் பேரொளியான் பந்தன் நல்ல முகைமேவு முதிர்சடையான் கள்ளி லேத்தப் புகழோடும் பேரின்பம் புகுதும் அன்றே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சிவானந்தேசுவரர், தேவியார் - ஆனந்தவல்லியம்மை.