திருவேகம்பம் பண் - மேகராகக்குறிஞ்சி
முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு
1.133 திருவேகம்பம்
திருஞானசம்பந்தர்
வெந்தவெண் பொடிப்பூசு மார்பின்விரி நூலொருபால் பொருந்தக் கந்தமல்கு குழலியோடுங் கடிபொழிற் கச்சி தன்னுள் அந்தமில் குணத்தா ரவர்போற்ற அணங்கினொ டாடல்புரி எந்தை மேவிய ஏகம்பந்தொழு தேத்த இடர்கெடுமே.
வரந்திகழு மவுணர் மாநகர்மூன் றுடன்மாய்ந் தவியச் சரந்துரந் தெரிசெய்த தாழ்சடைச் சங்கரன் மேயவிடம் குருந்தம் மல்லிகை கோங்குமா தவிநல்ல குராமரவந் திருந்துபைம் பொழிற்கச்சி யேகம்பஞ் சேர விடர்கெடுமே.
வண்ணவெண் பொடிப்பூசு மார்பின் வரியர வம்புனைந்து பெண்ணமர்ந் தெரியாடற் பேணிய பிஞ்ஞகன் மேயவிடம் விண்ணமர் நெடுமாட மோங்கி விளங்கிய கச்சிதன்னுள் திண்ணமாம் பொழில்சூழ்ந்த ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
தோலும்நூ லுந்துதைந்த வரைமார்பிற் சுடலைவெண் ணீறணிந்து காலன்மாள் வுறக்காலாற் காய்ந்த கடவுள் கருதுமிடம் மாலைவெண் மதிதோயு மாமதிற் கச்சி மாநகருள் ஏலம்நாறிய சோலைசூழ் ஏகம்பம் ஏத்த விடர்கெடுமே.
தோடணிம் மலர்க்கொன்றை சேர்சடைத் தூமதி யம்புனைந்து பாடல்நான் மறையாகப் பல்கணப் பேய்க ளவைசூழ வாடல்வெண் டலையோ டனலேந்தி மகிழ்ந்துடன் ஆடல்புரி சேடர்சேர் கலிக்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
சாகம்பொன் வரையாகத் தானவர் மும்மதில் சாயவெய் தாகம்பெண் ணொருபாக மாக அரவொடு நூலணிந்து மாகந்தோய் மணிமாட மாமதிற் கச்சி மாநகருள் ஏகம்பத் துறையீசன் சேவடி யேத்த விடர்கெடுமே. (*) (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
வாணிலா மதிபுல்கு செஞ்சடை வாளர வம்மணிந்து நாணிடத் தினில்வாழ்க்கை பேணி நகுதலையிற் பலிதேர்ந் தேணிலா அரக்கன்றன் நீள்முடி பத்தும் இறுத்தவனூர் சேணுலாம் பொழிற்கச்சி ஏகம்பஞ் சேர விடர்கெடுமே.
பிரமனுந் திருமாலுங் கைதொழப் பேரழ லாயபெம்மான் அரவஞ் சேர்சடை அந்தணன் அணங்கினொ டமருமிடம் கரவில்வண் கையினார்கள் வாழ்கலிக் கச்சி மாநகருள் மரவஞ்சூழ் பொழிலேகம் பந்தொழ வில்வினை மாய்ந்தறுமே.
குண்டுபட் டமணா யவரொடுங் கூறைதம் மெய்போர்க்கும் மிண்டர் கட்டிய கட்டுரை யவைகொண்டு விரும்பேன்மின் விண்டவர் புரமூன்றும் வெங்கணை ஒன்றி னாலவியக் கண்டவன் கலிக்கச்சி யேகம்பங் காண விடர்கெடுமே.
ஏரினார் பொழில்சூழ்ந்த கச்சி யேகம்பம் மேயவனை காரினார் மணிமாட மோங்கு கழுமல நன்னகருள் பாரினார் தமிழ்ஞான சம்பந்தன் பரவிய பத்தும்வல்லார் சீரினார் புகழோங்கி விண்ணவ ரோடுஞ் சேர்பவரே.