Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.15 திருநெய்த்தானம்

திருஞானசம்பந்தர்

1.15

திருநெய்த்தானம் பண் - நட்டபாடை

152

மையாடிய கண்டன்மலை மகள்பாகம துடையான் கையாடியகேடில் கரியுரிமூடிய வொருவன் செய்யாடிய குவளைம்மலர் நயனத்தவ ளோடும் நெய்யாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

152

பறையும்பழி பாவம்படு துயரம்பல தீரும் பிறையும்புனல் அரவும்படு சடையெம்பெருமா னூர் அறையும்புனல் வருகாவிரி அலைசேர்வட கரைமேல் நிறையும்புனை மடவார்பயில் நெய்த்தானமெ னீரே.

154

பேயாயின பாடப்பெரு நடமாடிய பெருமான் வேயாயின தோளிக்கொரு பாகம்மிக வுடையான் தாயாகிய வுலகங்களை நிலைபேறுசெய் தலைவன் நேயாடிய பெருமானிடம் நெய்த்தானமெ னீரே.

155

சுடுநீறணி யண்ணல்சுடர் சூலம்மனல் ஏந்தி நடுநள்ளிருள் நடமாடிய நம்பன்னுறை யிடமாம் கடுவாளிள அரவாடுமிழ் கடல்நஞ்சம துண்டான் நெடுவாளைகள் குதிகொள்ளுயர் நெய்த்தானமெ னீரே.

156

நுகராரமொ டேலம்மணி செம்பொன்னுரை யுந்திப் பகராவரு புனற்காவிரி பரவிப்பணிந் தேத்தும் நிகரான்மண லிடுதன்கரை(*) நிகழ்வாயநெய்த் தான நகரானடி யேத்தந்நமை நடலையடை யாவே. (*) தண்கரை என்றும் பாடம்.

157

விடையார்கொடி யுடையவ்வணல் வீந்தார்வெளை யெலும்பும் உடையார்நறு மாலைச்சடை யுடையாரவர் மேய புடையேபுனல் பாயும்வயல் பொழில்சூழ்தணெய்த்(*) தானம் அடையாதவ ரென்றும்அம ருலகம்மடை யாரே. (*) சூழ்ந்த நெய்த்தானம் என்றும் பாடம்.

158

நிழலார்வயல் கமழ்சோலைகள் நிறைகின்றநெய்த் தானத் தழலானவன் அனலங்கையி லேந்தியழ காய கழலானடி நாளுங்கழ லாதேவிட லின்றித் தொழலாரவர் நாளுந்துய ரின்றித்தொழு வாரே.

159

அறையார்கட லிலங்கைக்கிறை யணிசேர்கயி லாயம் இறையாரமுன் எடுத்தான்இரு பதுதோளிற ஊன்றி நிறையார்புனல் நெய்த்தானன்நன் நிகழ்சேவடி பரவக் கறையார்கதிர் வாளீந்தவர் கழலேத்துதல் கதியே.

160

கோலம்முடி நெடுமாலொடு கொய்தாமரை யானும் சீலம்மறி வரிதாயொளி திகழ்வாயநெய்த் தானம் காலம்பெற மலர்நீரவை தூவித்தொழு தேத்தும் ஞாலம்புகழ் அடியாருடல் உறுநோய்நலி யாவே.

161

மத்தம்மலி சித்தத்திறை மதியில்லவர் சமணர் புத்தரவர் சொன்னம்மொழி பொருளாநினை யேன்மின் நித்தம்பயில் நிமலன்னுறை நெய்த்தானம தேத்தும் சித்தம்முடை யடியாருடல் செறுநோயடை யாவே.

162

தலம்மல்கிய புனற்காழியுள் தமிழ்ஞானசம் பந்தன் நிலம்மல்கிய புகழான்மிகு நெய்த்தானனை நிகரில் பலம்மல்கிய பாடல்லிவை பத்தும்மிக வல்லார் சிலமல்கிய செல்வன்னடி சேர்வர்சிவ கதியே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நெய்யாடியப்பர், தேவியார் - வாலாம்பிகையம்மை. உள்ளுறை அட்டவணைக்குத் திரும்ப