Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.92 திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள்

திருஞானசம்பந்தர்

1.92

திருவீழிமிழலை - திருவிருக்குக்குறள் பண் - குறிஞ்சி

992

வாசி தீரவே, காசு நல்குவீர் மாசின் மிழலையீர், ஏச லில்லையே.

993

இறைவ ராயினீர், மறைகொள் மிழலையீர் கறைகொள் காசினை, முறைமை நல்குமே.

994

செய்ய மேனியீர், மெய்கொள் மிழலையீர் பைகொள் அரவினீர், உய்ய நல்குமே.

995

நீறு பூசினீர், ஏற தேறினீர் கூறு மிழலையீர், பேறும் அருளுமே.

996

காமன் வேவவோர், தூமக் கண்ணினீர் நாம மிழலையீர், சேமம் நல்குமே.

997

பிணிகொள் சடையினீர், மணிகொள் மிடறினீர் அணிகொள் மிழலையீர், பணிகொண் டருளுமே.

998

மங்கை பங்கினீர், துங்க மிழலையீர் கங்கை முடியினீர், சங்கை தவிர்மினே.

999

அரக்கன் நெரிதர, இரக்க மெய்தினீர் பரக்கு மிழலையீர், கரக்கை தவிர்மினே.

1000

அயனும் மாலுமாய், முயலும் முடியினீர் இயலும் மிழலையீர், பயனும் அருளுமே.

1001

பறிகொள் தலையினார், அறிவ தறிகிலார் வெறிகொள் மிழலையீர், பிரிவ தரியதே.

1002

காழி மாநகர், வாழி சம்பந்தன் வீழி மிழலைமேல், தாழும் மொழிகளே.

இது படிக்காசு சுவாமியருளியபோது வட்டந்தீர ஓதியது.