Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.17 திருவேணுபுரம்

திருஞானசம்பந்தர்

2.17

திருவேணுபுரம் பண் - இந்தளம்

176

நிலவும் புனலும் நிறைவா ளரவும் இலகுஞ் சடையார்க் கிடமாம் எழிலார் உலவும் வயலுக் கொளியார் முத்தம் விலகுங் கடலார் வேணு புரமே.

177

அரவார் கரவன் அமையார் திரள்தோள் குரவார் குழலா ளொருகூ றனிடங் கரவா தகொடைக் கலந்தா ரவர்க்கு விரவா கவல்லார் வேணு புரமே.

178

ஆகம் மழகா யவள்தான் வெருவ நாகம் உரிபோர்த் தவனண் ணுமிடம் போகந் தருசீர் வயல்சூழ் பொழில்கள் மேகந் தவழும் வேணு புரமே.

179

காசக் கடலில் விடமுண் டகண்டத் தீசர்க் கிடமா வதுஇன் னறவ வாசக் கமலத் தனம்வன் றிரைகள் வீசத் துயிலும் வேணு புரமே.

180

அரையார் கலைசேர் அனமென் னடையை உரையா வுகந்தா னுறையும் இடமாம் நிரையார் கமுகின் நிகழ்பா ளையுடை விரையார் பொழில்சூழ் வேணு புரமே.

181

ஒளிரும் பிறையும் முறுகூ விளவின் தளிருஞ் சடைமே லுடையா னிடமாம் நளிரும் புனலின் னலசெங் கயல்கள் மிளிரும் வயல்சூழ் வேணு புரமே. (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.

182

ஏவும் படைவேந் தன்இரா வணனை ஆவென் றலற அடர்த்தா னிடமாந் தாவும் மறிமா னொடுதண் மதியம் மேவும் பொழில்சூழ் வேணு புரமே.

183

கண்ணன் கடிமா மலரிற் றிகழும் அண்ணல் இருவர் அறியா இறையூர் வண்ணச் சுதைமா ளிகைமேற் கொடிகள் விண்ணிற் றிகழும் வேணு புரமே.

184

போகம் மறியார் துவர்போர்த் துழல்வார் ஆகம் மறியா அடியார் இறையூர் மூகம் மறிவார் கலைமுத் தமிழ்நூல் மீகம் மறிவார் வேணு புரமே.

185

கலமார் கடல்போல் வளமார் தருநற் புலமார் தருவே ணுபுரத் திறையை நலமார் தருஞா னசம்பந் தன்சொன்ன குலமார் தமிழ்கூ றுவர்கூர் மையரே.