Skip to content
Thevaram

இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

2.35 திருக்குரங்காடுதுறை

திருஞானசம்பந்தர்

2.35

திருக்குரங்காடுதுறை பண் - இந்தளம்

372

பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி அரவச் சடையந் தணன்மேய அழகார் குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.

373

விண்டார் புரமூன்று மெரித்த விமலன் இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங் கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே.

374

நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும் இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங் குறைவில் லவனூர் குரங்காடு துறையே.

375

விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித் தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப் பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன் கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.

376

நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன் ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர் கூறான்நகர் போல்குரங் காடு துறையே.

377

நளிரும் மலர்க்கொன் றையுநாறு கரந்தைத் துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில் குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே.

378

பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும் முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும் அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங் குழகன் னகர்போல் குரங்காடு துறையே.

379

வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங் கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல் குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.

380

நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப் படியா கியபண் டங்கனின் றெரியாடி செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின் கொடியான் நகர்போல் குரங்காடு துறையே.

381

துவரா டையர்வே டமலாச் சமண்கையர் கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம் நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக் குவையார் கரைசேர் குரங்காடு துறையே.

382

நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன் கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல் சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - குலைவணங்குநாதர், தேவியார் - அழகுசடைமுடியம்மை.