திருநாரையூர் பண் - பியந்தைக்காந்தாரம்
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.86 திருநாரையூர்
திருஞானசம்பந்தர்
உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம செயல்தீங்கு குற்ற முலகில் வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம் மிகவேத்தி நித்தம் நினைமின் வரைசிலை யாகவன்று மதில்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவ திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கும் உயரும் வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன் கானிடை யாடிபூதப் படையா னியங்கு விடையான் இலங்கு முடிமேல் தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.
ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப் பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்ற வண்ண மகலும் போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணருந் தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.
தீயுற வாயஆக்கை அதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற உலகின் தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும் பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல் தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
வசையப ராதமாய வுவரோத நீங்குந் தவமாய தன்மை வரும்வான் மிசையவ ராதியாய திருமார் பிலங்கு விரிநூலர் விண்ணும் நிலனும் இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர் திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை உலகில் குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும் மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன் அரவார்த்த அண்ணல் கழலே திறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.
தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற உடலின் இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும் முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச் சரமுன் றெரிந்த அவுணர் சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம் நனியஞ்சு மாத லுறநீர் மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் அழிபா டிலாத கடலின் அருவரை சூழிலங்கை அரையன்றன் வீரம் அழியத் தடக்கை முடிகள் திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்க மிக்க பகைதீர்க்கு மேய வுடலில் தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழுஞ் சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச் சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
மிடைபடு துன்பமின்பம் உளதாக்கு முள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும் படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலிபாடி யாடி பெருமை உடையினை விட்டுளோரும் உடல்போர்த் துளோரும் உரைமாயும் வண்ணம் அழியச் செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
எரியொரு வண்ணமாய உருவானை யெந்தை பெருமானை உள்கி நினையார் திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான் பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்தும் மொழிவார் திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.