Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.105 திருக்கலிக்காமூர்

திருஞானசம்பந்தர்

3.105

திருக்கலிக்காமூர் பண் - பழம்பஞ்சுரம்

1123

மடல்வரை யின்மது விம்முசோலை வயல்சூழ்ந் தழகாருங் கடல்வரை யோதங் கலந்துமுத்தஞ் சொரியுங் கலிக்காமூர் உடல்வரை யின்னுயிர் வாழ்க்கையாய ஒருவன் கழலேத்த இடர்தொட ராவினை யானசிந்தும் இறைவன் னருளாமே.

1124

மைவரை போற்றிரை யோடுகூடிப் புடையே மலிந்தோதங் கைவரை யால்வளர் சங்கமெங்கு மிருக்குங் கலிக்காமூர் மெய்வரை யான்மகள் பாகன்தன்னை விரும்ப உடல்வாழும் ஐவரை ஆசறுத் தாளுமென்பர் அதுவுஞ் சரதமே.

1125

தூவிய நீர்மல ரேந்திவையத் தவர்கள் தொழுதேத்தக் காவியின் நேர்விழி மாதரென்றுங் கவினார் கலிக்காமூர் மேவிய ஈசனை எம்பிரானை விரும்பி வழிபட்டால் ஆவியுள் நீங்கலன் ஆதிமூர்த்தி அமரர் பெருமானே.

1126

குன்றுகள் போற்றிரை உந்தியந்தண் மணியார் தரமேதி கன்றுடன் புல்கியா யம்மனைசூழ் கவினார் கலிக்காமூர் என்றுணர் ஊழியும் வாழுமெந்தை பெருமான் அடியேத்தி நின்றுணர் வாரை நினையகில்லார் நீசர் நமன்தமரே.

1127

வானிடை வாண்மதி மாடந்தீண்ட மருங்கே கடலோதங் கானிடை நீழலிற் கண்டல்வாழுங் கழிசூழ் கலிக்காமூர் ஆனிடை ஐந்துகந் தாடினானை அமரர் தொழுதேத்த நானடை வாம்வண மின்புதந்த நலமே நினைவோமே.

1128

துறைவளர் கேதகை மீதுவாசஞ் சூழ்வான் மலிதென்றல் கறைவள ருங்கட லோதமென்றுங் கலிக்குங் கலிக்காமூர் மறைவள ரும்பொரு ளாயினானை மனத்தால் நினைந்தேத்த நிறைவள ரும்புக ழெய்தும்வாதை நினையா வினைபோமே.

1129

கோலநன் மேனியின் மாதர்மைந்தர் கொணர் மங்கிலியத்திற் காலமும் பொய்க்கினுந் தாம்வழுவா தியற்றுங் கலிக்காமூர் ஞாலமுந் தீவளி ஞாயிறாய நம்பன் கழலேத்தி ஓலமி டாதவர் ஊழியென்றும் உணர்வைத் துறந்தாரே.

1130

ஊரர வந்தலை நீண்முடியான் ஒலிநீர் உலகாண்டு காரர வக்கடல் சூழவாழும் பதியாம் கலிக்காமூர் தேரர வல்குல்அம் பேதையஞ்சத் திருந்து வரைபேர்த்தான் ஆரர வம்பட வைத்தபாதம் உடையான் இடமாமே.

1131

அருவரை யேந்திய மாலும்மற்றை அலர்மேல் உறைவானும் இருவரும் அஞ்ச எரியுருவாய் எழுந்தான் கலிக்காமூர் ஒருவரை யான்மகள் பாகன்றன்னை உணர்வாற் றொழுதேத்தத் திருமரு வுஞ்சிதை வில்லைசெம்மைத் தேசுண் டவர்பாலே.

1132

மாசு பிறக்கிய மேனியாரும் மருவுந் துவராடை மீசு பிறக்கிய மெய்யினாரும் அறியார் அவர்தோற்றங் காசினி நீர்த்திரள் மண்டியெங்கும் வளமார் கலிக்காமூர் ஈசனை யெந்தை பிரானையேத்தி நினைவார் வினைபோமே.

1133

ஆழியுள் நஞ்சமு தாரவுண்டன் றமரர்க் கமுதுண்ண ஊழிதோ றும்முள ராவளித்தான் உலகத் துயர்கின்ற காழியுள் ஞானசம் பந்தன்சொன்ன தமிழாற் கலிக்காமூர் வாழியெம் மானை வணங்கியேத்த மருவா பிணிதானே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சுந்தரேசுவரர், தேவியார் - அழகுவனமுலையம்மை.