திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு பண் - பழம்பஞ்சுரம்
மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
3.108 திருஆலவாய் - நாலடிமேல் வைப்பு
திருஞானசம்பந்தர்
வேத வேள்வியை நிந்தனை செய்துழல் ஆத மில்லி அமணொடு தேரரை வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே பாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
வைதி கத்தின் வழியொழு காதவக் கைத வமுடைக் காரமண் தேரரை எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே மைதி கழ்தரு மாமணி கண்டனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
மறைவ ழக்கமி லாதமா பாவிகள் பறித லைக்கையர் பாயுடுப் பார்களை முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே மறியு லாங்கையில் மாமழு வாளனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
அறுத்த வங்கமா றாயின நீர்மையைக் கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ் செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
அந்த ணாளர் புரியும் அருமறை சிந்தை செய்யா அருகர் திறங்களைச் சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே வெந்த நீற தணியும் விகிர்தனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே காட்டி லானை உரித்தஎங் கள்வனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
அழல தோம்பும் அருமறை யோர்திறம் விழல தென்னும் அருகர் திறத்திறங் கழல வாதுசெ யத்திரு வுள்ளமே தழல்இ லங்கு திருவுருச் சைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
நீற்று மேனிய ராயினர் மேலுற்ற காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத் தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய் ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
நீல மேனி அமணர் திறத்துநின் சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே மாலும் நான்முக னுங்காண் பரியதோர் கோல மேனிய தாகிய குன்றமே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
அன்று முப்புரஞ் செற்ற அழகநின் துன்று பொற்கழல் பேணா அருகரைத் தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே கன்று சாக்கியர் காணாத் தலைவனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு வாடல் மேனி அமணரை வாட்டிட மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப் பாடல் வல்லவர் பாக்கிய வாளரே.