Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.43 சீகாழி

திருஞானசம்பந்தர்

3.43

சீகாழி பண் - கௌசிகம்

455

சந்த மார்முலை யாள்தன கூறனார் வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார் கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள் எந்தை யாரடி யென்மனத் துள்ளவே.

456

மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத் தேனி டங்கொளுங் கொன்றையந் தாரினார் கானி டங்கொளுந் தண்வயற் காழியார் ஊனி டங்கொண்டென் உச்சியில் நிற்பரே.

457

மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர் பைகொள் வாளர வாட்டும் படிறனார் கைகொள் மான்மறி யார்கடற் காழியுள் ஐயன் அந்தணர் போற்ற இருக்குமே.

458

புற்றின் நாகமும் பூளையும் வன்னியுங் கற்றை வார்சடை வைத்தவர் காழியுட் பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல் உற்ற போதுடன் ஏத்தி யுணருமே.

459

நலியுங் குற்றமும் நம்முட னோய்வினை மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய கலிக டிந்தகை யார்கடற் காழியுள் அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.

460

பெண்ணோர் கூறினர் பேயுடன் ஆடுவர் பண்ணும் ஏத்திசை பாடிய வேடத்தர் கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள் அண்ண லாய அடிகள் சரிதையே.

461

பற்று மானும் மழுவும் அழகுற முற்று மூர்திரிந் துபலி முன்னுவர் கற்ற மாநன் மறையவர் காழியுட் பெற்றம் ஏற துகந்தார் பெருமையே.

462

எடுத்த வல்லரக் கன்முடி தோளிற அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுள் கொடித்த யங்குநற் கோயிலுள் இன்புற இடத்து மாதொடு தாமும் இருப்பரே.

463

காலன் தன்னுயிர் வீட்டு கழலடி மாலு நான்முகன் தானும் வனப்புற ஓல மிட்டுமுன் தேடி யுணர்கிலாச் சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.

464

உருவ நீத்தவர் தாமும் உறுதுவர் தருவ லாடையி னாருந் தகவிலர் கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள் ஒருவன் சேவடி யேயடைந் துய்ம்மினே.

465

கானல் வந்துல வுங்கடற் காழியுள் ஈன மில்லி இணையடி யேத்திடும் ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ் மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.