திருப்பூந்தராய் ஈரடிமேல் வைப்பு பண் - காந்தாரபஞ்சமம்
மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
3.5 திருப்பூந்தராய் ஈரடிமேல் வைப்பு
திருஞானசம்பந்தர்
தக்கன் வேள்வி தகர்த்தவன் பூந்தராய் மிக்க செம்மை விமலன் வியன்கழல் சென்று சிந்தையில் வைக்க மெய்க்கதி நன்ற தாகிய நம்பன்தானே.
புள்ளி னம்புகழ் போற்றிய பூந்தராய் வெள்ளந் தாங்கு விகிர்தன் அடிதொழ ஞாலத் தில்லுயர் வாருள்கு நன்னெறி மூல மாய முதல்வன்தானே.
வேந்த ராயுல காள விருப்புறிற் பூந்தராய் நகர் மேயவன் பொற்கழல் நீதி யால்நினைந் தேத்தி யுள்கிடச் சாதி யாவினை யானதானே.
பூசு ரர்தொழு தேத்திய பூந்தராய் ஈசன் சேவடி யேத்தி யிறைஞ்சிடச் சிந்தை நோயவை தீர நல்கிடும் இந்து வார்சடை யெம்மிறையே.
பொலிந்த என்பணி மேனியன் பூந்தராய் மலிந்த புந்திய ராகி வணங்கிட நுந்தம் மேல்வினை யோட வீடுசெய் எந்தை யாயஎம் ஈசன்தானே.
பூதஞ் சூழப் பொலிந்தவன் பூந்தராய் நாதன் சேவடி நாளும் நவின்றிட நல்கு நாடொறும் இன்ப நளிர்புனல் பில்கு வார்சடைப் பிஞ்ஞகனே.
புற்றில் நாகம் அணிந்தவன் பூந்தராய் பற்றி வாழும் பரமனைப் பாடிடப் பாவ மாயின தீரப் பணித்திடுஞ் சேவ தேறிய செல்வன்தானே.
போத கத்துரி போர்த்தவன் பூந்தராய் காத லித்தான் கழல்விரல் ஒன்றினால் அரக்கன் ஆற்றல் அழித்தவ னுக்கருள் பெருக்கி நின்ற எம்பிஞ்ஞகனே.
மத்த மான இருவர் மருவொணா அத்த னானவன் மேவிய பூந்தராய் ஆள தாக அடைந்துய்ம்மின் நும்வினை மாளு மாறருள் செய்யுந்தானே.
பொருத்த மில்சமண் சாக்கியர் பொய்கடிந் திருத்தல் செய்த பிரான்இமை யோர்தொழப் பூந்த ராய்நகர் கோயில் கொண்டுகை ஏந்து மான்மறி யெம்மிறையே.
புந்தி யால்மிக நல்லவர் பூந்தராய் அந்த மில்லெம் மடிகளை ஞானசம் பந்தன் மாலைகொண் டேத்தி வாழுநும் பந்த மார்வினை பாறிடுமே.