திருஆலவாய் பண் - கௌசிகம்
மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
3.51 திருஆலவாய்
திருஞானசம்பந்தர்
செய்ய னேதிரு ஆலவாய் மேவிய ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப் பொய்ய ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பைய வேசென்று பாண்டியற் காகவே.
சித்த னேதிரு ஆலவாய் மேவிய அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை எத்த ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.
தக்கன் வேள்வி தகர்த்தருள் ஆலவாய்ச் சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை எக்க ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பக்க மேசென்று பாண்டியற் காகவே.
சிட்ட னேதிரு ஆலவாய் மேவிய அட்ட மூர்த்திய னேயஞ்ச லென்றருள் துட்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பட்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
நண்ண லார்புரம் மூன்றெரி ஆலவாய் அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர் பண்ணி யல்தமிழ்ப் பாண்டியற் காகவே.
தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும் அஞ்ச லென்றருள் ஆலவா யண்ணலே வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர் பஞ்ச வன்தென்னன் பாண்டியற் காகவே.
செங்கண் வெள்விடை யாய்திரு ஆலவாய் அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக் கங்கு லார்அமண் கையரிடுங் கனல் பங்க மில்தென்னன் பாண்டியற் காகவே.
தூர்த்தன் வீரந் தொலைத்தருள் ஆலவாய் ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை ஏத்தி லாஅம ணர்கொளு வுஞ்சுடர் பார்த்தி வன்தென்னன் பாண்டியற் காகவே.
தாவி னான்அயன் தானறி யாவகை மேவி னாய்திரு ஆலவா யாயருள் தூவி லாஅம ணர்கொளு வுஞ்சுடர் பாவி னான்தென்னன் பாண்டியற் காகவே.
எண்டி சைக்கெழில் ஆலவாய் மேவிய அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக் குண்ட ராம்அம ணர்கொளு வுஞ்சுடர் பண்டி மன்தென்னன் பாண்டியற் காகவே.
அப்பன் ஆலவா யாதி யருளினால் வெப்பந் தென்னவன் மேலுற மேதினிக் கொப்ப ஞானசம் பந்தன் உரைபத்துஞ் செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.