Skip to content
Thevaram

மூன்றாம் திருமுறை – திருக்கடைக்காப்பு

3.80 திருவீழிமிழலை - திருவிராகம்

திருஞானசம்பந்தர்

3.80

திருவீழிமிழலை - திருவிராகம் பண் - சாதாரி

857

சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத் தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான் பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடஅருகே கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே.

858

பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைகள் ஓதுபணிநற் சிட்டர்கள் சயத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொள் மேனியவனூர் மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய் விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.

859

மண்ணிழி சுரர்க்குவளம் மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக் கெண்ணிழிவில் இன்பநிகழ் வெய்தஎழி லார்பொழில் இலங்கறுபதம் பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடஅழகார் விண்ணிழி விமானமுடை விண்ணவர் பிரான்மருவு வீழிநகரே.

860

செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நன்கலை தெரிந்தவவரோ டந்தமில் குணத்தவர்கள் அர்ச்சனைகள் செய்யஅமர் கின்றஅரனூர் கொந்தலர் பொழிற்பழன வேலிகுளிர் தண்புனல் வளம்பெருகவே வெந்திறல் விளங்கிவளர் வேதியர் விரும்புபதி வீழிநகரே.

861

பூதபதி யாகிய புராணமுனி புண்ணியநன் மாதைமருவிப் பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம் மாதவர்கள் அன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால் ஏதமதி லாதவகை இன்பம்அமர் கின்றஎழில் வீழிநகரே.

862

மண்ணின்மறை யோர்மருவு வைதிகமும் மாதவமும் மற்றுமுலகத் தெண்ணில்பொரு ளாயவை படைத்தஇமை யோர்கள்பெரு மானதிடமாம் நண்ணிவரு நாவலர்கள் நாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர் விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.

863

மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய் அந்தர விசும்பணவி அற்புத மெனப்படரும் ஆழியிருள்வாய் மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டஒளிபோய் வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.

864

ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால் ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர் தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிலோ டானதிரு உற்றுவளர் அந்தணர் நிறைந்தஅணி வீழிநகரே.

865

ஏனவுரு வாகிமண் இடந்தஇமை யோனுமெழி லன்னவுருவம் ஆனவனும் ஆதியினொ டந்தமறி யாதஅழல் மேனியவனூர் வானணவும் மாமதில் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய் வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.

866

குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித் தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம் பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர் வெண்டரள வாள்நகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.

867

மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர் வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார் சித்திர விமானம்அமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமோடி யோகவரதே.