திருவாரூர் - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.103 திருவாரூர் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
வேம்பினைப் பேசி விடக்கினை யோம்பி வினைபெருக்கித் தூம்பினைத் தூர்த்தங்கோர் சுற்றந் துணையென் றிருத்திர்தொண்டீர் ஆம்பலம் பூம்பொய்கை ஆரூர் அமர்ந்தான் அடிநிழற்கீழ்ச் சாம்பலைப் பூசிச் சலமின்றித் தொண்டுபட் டுய்ம்மின்களே.
ஆராய்ந் தடித்தொண்டர் ஆணிப்பொன் ஆரூர் அகத்தடக்கிப் பாரூர் பரிப்பத்தம் பங்குனி உத்திரம் பாற்படுத்தா னாரூர் நறுமலர் நாதன் அடித்தொண்டன் நம்பிநந்தி நீரால் திருவிளக் கிட்டமை நீணா டறியுமன்றே.
பூம்படி மக்கலம் பொற்படி மக்கலம் என்றிவற்றால் ஆம்படி மக்கல மாகிலும் ஆரூர் இனிதமர்ந்தார் தாம்படி மக்கலம் வேண்டுவ ரேல்தமிழ் மாலைகளால் நாம்படி மக்கலஞ் செய்து தொழுதுய் மடநெஞ்சமே.
துடிக்கின்ற பாம்பரை ஆர்த்துத் துளங்கா மதியணிந்து முடித்தொண்ட ராகி முனிவர் பணிசெய்வ தேயுமன்றிப் பொடிக்கொண்டு பூசிப் புகுந்தொண்டர் பாதம் பொறுத்தபொற்பால் அடித்தொண்டன் நந்தியென் பானுளன் ஆரூர் அமுதினுக்கே.
கரும்பு பிடித்தவர் காயப்பட் டாரங்கோர் கோடலியால் இரும்பு பிடித்தவர் இன்புறப் பட்டார் இவர்கள்நிற்க அரும்பவிழ் தண்பொழில் சூழணி ஆரூர் அமர்ந்தபெம்மான் விரும்பு மனத்தினை யாதொன்று நானுன்னை வேண்டுவனே.
கொடிகொள் விதானங் கவரி பறைசங்கங் கைவிளக்கோ டிடிவில் பெருஞ்செல்வ மெய்துவர் எய்தியும் ஊனமில்லா அடிகளும் ஆரூர் அகத்தின ராயினும் அந்தவளப் பொடிகொண் டணிவார்க் கிருளொக்கு நந்தி புறப்படிலே. (*) இப்பதிகத்தில் 7,8,9-ம்செய்யுட்கள் சிதைந்து போயின.
சங்கொலிப் பித்திடு மின்சிறு காலைத் தடவழலில் குங்கிலி யப்புகைக் கூட்டென்றுங் காட்டி இருபதுதோள் அங்குலம் வைத்தவன் செங்குரு திப்புன லோடஅஞ்ஞான் றங்குலி வைத்தான் அடித்தா மரையென்னை ஆண்டனவே.