திருப்புகலூர் - திருவிருத்தம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.106 திருப்புகலூர் - திருவிருத்தம்
திருநாவுக்கரசர்
தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப் புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோ என்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத் தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.
பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள் தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய் புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசே என்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே. (*) இப்பதிகத்தில் 3-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.
பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூர்க்கரசே மன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய் என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார் உன்னள வேயெனக் கொன்றுமி ரங்காத உத்தமனே. (*) இப்பதிகத்தில் 5,6,7,8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங் காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத் தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க் கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.