Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.24 திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.24

திருவதிகைவீரட்டானம் - திருநேரிசை

239

இரும்புகொப் பளித்த யானை ஈருரி போர்த்த ஈசன் கரும்புகொப் பளித்த இன்சொற் காரிகை பாக மாகச் சுரும்புகொப் பளித்த கங்கைத் துவலைநீர் சடையி லேற்ற அரும்புகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

240

கொம்புகொப் பளித்த திங்கட் கோணல்வெண் பிறையுஞ் சூடி வம்புகொப் பளித்த கொன்றை வளர்சடை மேலும் வைத்துச் செம்புகொப் பளித்த மூன்று மதிலுடன் சுருங்க வாங்கி அம்புகொப் பளிக்க எய்தார் அதிகைவீ ரட்ட னாரே.

241

விடையுங்கொப் பளித்த பாதம் விண்ணவர் பரவி யேத்தச் சடையுங்கொப் பளித்த திங்கட் சாந்தவெண் ணீறு பூசி உடையுங்கொப் பளித்த நாகம் உள்குவார் உள்ளத் தென்றும் அடையுங்கொப் பளித்த சீரார் அதிகைவீ ரட்ட னாறே.

242

கறையுங்கொப் பளித்த கண்டர் காமவேள் உருவம் மங்க இறையுங்கொப் பளித்த கண்ணார் ஏத்துவார் இடர்கள் தீர்ப்பார் மறையுங்கொப் பளித்த நாவர் வண்டுண்டு பாடுங் கொன்றை அறையுங்கொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

243

நீறுகொப் பளித்த மார்பர் நிழல்திகழ் மழுவொன் றேந்திக் கூறுகொப் பளித்த கோதை கோல்வளை மாதோர் பாகம் ஏறுகொப் பளித்த பாதம் இமையவர் பரவி யேத்த ஆறுகொப் பளித்த சென்னி அதிகைவீ ரட்ட னாரே.

244

வணங்குகொப் பளித்த பாதம் வானவர் பரவி யேத்தப் பிணங்குகொப் பளித்த சென்னிச் சடையுடைப் பெருமை யண்ணல் சுணங்குகொப் பளித்த கொங்கைச் சுரிகுழல் பாக மாக அணங்குகொப் பளித்த மேனி அதிகைவீ ரட்ட னாரே.

245

சூலங்கொப் பளித்த கையர் சுடர்விடு மழுவாள் வீசி நூலுங்கொப் பளித்த மார்பில் நுண்பொறி யரவஞ் சேர்த்தி மாலுங்கொப் பளித்த பாகர் வண்டுபண் பாடுங் கொன்றை ஆலங்கொப் பளித்த கண்டத் ததிகைவீ ரட்ட னாறே.

246

நாகங்கொப் பளித்த கையர் நான்மறை யாய பாடி மேகங்கொப் பளித்த திங்கள் விரிசடை மேலும் வைத்துப் பாகங்கொப் பளித்த மாதர் பண்ணுடன் பாடி யாட ஆகங்கொப் பளித்த தோளார் அதிகைவீ ரட்ட னாரே.

247

பரவுகொப் பளித்த பாடல் பண்ணுடன் பத்தர் ஏத்த விரவுகொப் பளித்த கங்கை விரிசடை மேவ வைத்து இரவுகொப் பளித்த கண்டர் ஏத்துவா ரிடர்கள் தீர்ப்பார் அரவுகொப் பளித்த கையர் அதிகைவீ ரட்ட னாரே.

248

தொண்டைகொப் பளித்த செவ்வாய்த் துடியிடைப் பரவை யல்குற் கொண்டைகொப் பளித்த கோதைக் கோல்வளை பாக மாக வண்டுகொப் பளித்த தீந்தேன் வரிக்கயல் பருகி மாந்தக் கெண்டைகொப் பளித்த தெண்ணீர்க் கெடிலவீ ரட்ட னாரே.