திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை பண் - கொல்லி
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.43 திருக்காஞ்சிமேற்றளி - திருநேரிசை
திருநாவுக்கரசர்
மறையது பாடிப் பிச்சைக் கென்றகந் திரிந்து வாழ்வார் பிறையது சடைமு டிமேற் பெய்வளை யாள்தன் னோடுங் கறையது கண்டங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் இறையவர் பாட லாடல் இலங்குமேற் றளிய னாரே.
மாலன மாயன் றன்னை மகிழ்ந்தனர் விருத்த ராகும் பாலனார் பசுப தியார் பால்வெள்ளை நீறு பூசிக் காலனைக் காலாற் செற்றார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏலநற் கடம்பன் தாதை இலங்குமேற் றளிய னாரே.
விண்ணிடை விண்ண வர்கள் விரும்பிவந் திறைஞ்சி வாழ்த்தப் பண்ணிடைச் சுவையின் மிக்க கின்னரம் பாடல் கேட்டார் கண்ணிடை மணியி னொப்பார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எண்ணிடை யெழுத்து மானார் இலங்குமேற் றளிய னாரே.
சோமனை அரவி னோடு சூழ்தரக் கங்கை சூடும் வாமனை வான வர்கள் வலங்கொடு வந்து போற்றக் காமனைக் காய்ந்த கண்ணார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏமநின் றாடும் எந்தை இலங்குமேற் றளிய னாரே.
ஊனவ ருயிரி னோடு முலகங்க ளூழி யாகித் தானவர் தனமு மாகித் தனஞ்சய னோடெ திர்ந்த கானவர் காள கண்டர் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏனமக் கோடு பூண்டார் இலங்குமேற் றளிய னாரே.
மாயனாய் மால னாகி மலரவ னாகி மண்ணாய்த் தேயமாய்த் திசையெட் டாகித் தீர்த்தமாய்த் திரிதர் கின்ற காயமாய்க் காயத் துள்ளார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் ஏயமென் றோளி பாகர் இலங்குமேற் றளிய னாரே.
மண்ணினை யுண்ட மாயன் தன்னையோர் பாகங் கொண்டார் பண்ணினைப் பாடி யாடும் பத்தர்கள் சித்தங் கொண்டார் கண்ணினை மூன்றுங் கொண்டார் காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எண்ணினை யெண்ண வைத்தார் இலங்குமேற் றளிய னாரே.
செல்வியைப் பாகங் கொண்டார் சேந்தனை மகனாக் கொண்டார் மல்லிகைக் கண்ணி யோடு மாமலர்க் கொன்றை சூடிக் கல்வியைக் கரையி லாத காஞ்சிமா நகர்தன் னுள்ளால் எல்லியை விளங்க நின்றார் இலங்குமேற் றளிய னாரே.
வேறிணை யின்றி யென்றும் விளங்கொளி மருங்கி னாளைக் கூறிய லாக வைத்தார் கோளரா மதியும் வைத்தார் ஆறினைச் சடையுள் வைத்தார் அணிபொழிற் கச்சி தன்னுள் ஏறினை யேறு மெந்தை இலங்குமேற் றளிய னாரே.
தென்னவன் மலையெ டுக்கச் சேயிழை நடுங்கக் கண்டு மன்னவன் விரலா லூன்ற மணிமுடி நெரிய வாயாற் கன்னலின் கீதம் பாடக் கேட்டவர் காஞ்சி தன்னுள் இன்னவற் கருளிச் செய்தார் இலங்குமேற் றளிய னாரே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - திருமேற்றளிநாதர், தேவியார் - திருமேற்றளிநாயகி.