திருஅவளிவணல்லூர் - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.59 திருஅவளிவணல்லூர் - திருநேரிசை
திருநாவுக்கரசர்
தோற்றினான் எயிறு கவ்வித் தொழிலுடை யரக்கன் றன்னைத் தேற்றுவான் சென்று சொல்லச் சிக்கெனத் தவிரு மென்று வீற்றினை யுடைய னாகி வெடுவெடுத் தெழுந்த வன்றன் ஆற்றலை அழிக்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
வெம்பினா ரரக்க ரெல்லாம் மிகச்சழக் காயிற் றென்று செம்பினா லெடுத்த கோயில் சிக்கெனச் சிதையு மென்ன நம்பினா ரென்று சொல்லி நன்மையான் மிக்கு நோக்கி அம்பினால் அழிய வெய்தார் அவளிவ ணல்லூ ராரே.
கீழ்ப்படக் கருத லாமோ கீர்த்திமை யுள்ள தாகிற் தோட்பெரு வலியி னாலே தொலைப்பன்யான் மலையை யென்று வேட்பட வைத்த வாறே விதிர்விதிர்த் தரக்கன் வீழ்ந்து ஆட்படக் கருதிப் புக்கார் அவளிவ ணல்லூ ராரே.
நிலைவலம் வல்ல னல்லன் நேர்மையை நினைய மாட்டான் சிலைவலங் கொண்ட செல்வன் சீரிய கயிலை தன்னைத் தலைவலங் கருதிப் புக்குத் தாக்கினான் தன்னை யன்று அலைகுலை யாக்கு வித்தார் அவளிவ ணல்லூ ராரே.
தவ்வலி யொன்ற னாகித் தனதொரு பெருமை யாலே மெய்வ்வலி யுடைய னென்று மிகப்பெருந் தேரை யூர்ந்து செவ்வலி கூர்வி ழியாற் சிரமத்தான் எடுக்குற் றானை அவ்வலி தீர்க்க வல்லார் அவளிவ ணல்லூ ராரே.
நன்மைதான் அறிய மாட்டான் நடுவிலா அரக்கர் கோமான் வன்மையே கருதிச் சென்று வலிதனைச் செலுத்த லுற்றுக் கன்மையான் மலையை யோடிக் கருதித்தான் எடுத்து வாயால் அம்மையோ வென்ன வைத்தார் அவளிவ ணல்லூ ராரே.
கதம்படப் போது வார்கள் போதுமக் கருத்தி னாலே சிதம்பட நின்ற நீர்கள் சிக்கெனத் தவிரு மென்று மதம்படு மனத்த னாகி வன்மையான் மிக்கு நோக்க அதம்பழத் துருவு செய்தார் அவளிவ ணல்லூ ராரே.
நாடுமிக் குழிதர் கின்ற நடுவிலா அரக்கர் கோனை ஓடுமிக் கென்று சொல்லி ஊன்றினான் உகிரி னாலே பாடுமிக் குய்வ னென்று பணியநற் றிறங்கள் காட்டி ஆடுமிக் கரவம் பூண்டார் அவளிவ ணல்லூ ராரே.
ஏனமா யிடந்த மாலும் எழில்தரு முளரி யானும் ஞானந்தா னுடைய ராகி நன்மையை அறிய மாட்டார் சேனந்தான் இலாவ ரக்கன் செழுவரை எடுக்க வூன்றி ஆனந்த அருள்கள் செய்தார் அவளிவ ணல்லூ ராரே.
ஊக்கினான் மலையை யோடி உணர்விலா அரக்கன் றன்னைத் தாக்கினான் விரலி னாலே தலைபத்துந் தகர வூன்றி நோக்கினான் அஞ்சத் தன்னை நோன்பிற வூன்று சொல்லி ஆக்கினார் அமுத மாக அவளிவ ணல்லூ ராரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - சாட்சிநாயகேசுவரர், தேவியார் - சவுந்தரநாயகியம்மை.