Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.6 திருக்கழிப்பாலை

திருநாவுக்கரசர்

4.6

திருக்கழிப்பாலை பண் - காந்தாரம்

52

வனபவள வாய்திறந்து வானவர்க்குந் தானவனே என்கின் றாளாற் சினபவளத் திண்டோ ள்மேற் சேர்ந்திலங்கு வெண்ணீற்றன் என்கின் றாளால் அனபவள மேகலையோ டப்பாலைக் கப்பாலான் என்கின் றாளாற் கனபவளஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

53

வண்டுலவு கொன்றை வளர்புன் சடையானே என்கின் றாளால் விண்டலர்ந்து நாறுவதோர் வெள்ளெருக்க நாண்மலருண் டென்கின் றாளால் உண்டயலே தோன்றுவதோர் உத்தரியப் பட்டுடையன் என்கின் றாளாற் கண்டயலே தோன்றுங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

54

பிறந்திளைய திங்களெம் பெம்மான் முடிமேல தென்கின் றாளால் நிறங்கிளருங் குங்குமத்தின் மேனி யவன்நிறமே யென்கின் றாளால் மறங்கிளர்வேற் கண்ணாள் மணிசேர் மிடற்றவனே யென்கின் றாளாற் கறங்கோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

55

இரும்பார்ந்த சூலத்தன் ஏந்தியோர் வெண்மழுவன் என்கின் றாளாற் சுரும்பார்ந்த மலர்க்கொன்றைச் சுண்ணவெண் ணீற்றவனே என்கின் றாளாற் பெரும்பால னாகியோர் பிஞ்ஞக வேடத்தன் என்கின் றாளாற் கரும்பானல் பூக்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

56

பழியிலான் புகழுடையன் பால்நீற்றான் ஆனேற்றன் என்கின் றாளால் விழியுலாம் பெருந்தடங்கண் இரண்டல்ல மூன்றுளவே என்கின் றாளாற் சுழியுலாம் வருகங்கை தோய்ந்த சடையவனே என்கின் றாளாற் கழியுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

57

பண்ணார்ந்த வீணை பயின்ற விரலவனே என்கின் றாளால் எண்ணார் புரமெரித்த எந்தை பெருமானே என்கின் றாளாற் பண்ணார் முழவதிரப் பாடலோ டாடலனே என்கின் றாளாற் கண்ணார் பூஞ்சோலைக் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

58

முதிருஞ் சடைமுடிமேல் முழ்கும் இளநாகம் என்கின் றாளால் அதுகண் டதனருகே தோன்றும் இளமதியம் என்கின் றாளாற் சதுர்வெண் பளிக்குக் குழைகாதின் மின்னிடுமே என்கின் றாளாற் கதிர்முத்தஞ் சிந்துங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

59

ஓரோத மோதி உலகம் பலிதிரிவான் என்கின் றாளால் நீரோத மேற நிமிர்புன் சடையானே என்கின் றாளாற் பாரோத மேனிப் பவளம் அவனிறமே என்கின் றாளாற் காரோத மல்குங் கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

60

வானுலாந் திங்கள் வளர்புன் சடையானே என்கின் றாளால் ஊனுலாம் வெண்டலைகொண் டூரூர் பலிதிரிவான் என்கின் றாளாற் தேனுலாங் கோதை திளைக்குந் திருமார்பன் என்கின் றாளாற் கானுலாஞ் சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

61

அடர்ப்பரிய இராவணனை அருவரைக்கீழ் அடர்த்தவனே என்கின் றாளாற் சுடர்ப்பெரிய திருமேனிச் சுண்ணவெண் ணீற்றவனே என்கின் றாளால் மடற்பெரிய ஆலின்கீழ் அறம்நால்வர்க் கன்றுரைத்தான் என்கின் றாளாற் கடற்கருவி சூழ்ந்த கழிப்பாலைச் சேர்வானைக் கண்டாள் கொல்லோ.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பால்வண்ணநாதர், தேவியார் - வேதநாயகியம்மை.