Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.75 தனித் - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.75

தனித் - திருநேரிசை

726

தொண்டனேன் பட்ட தென்னே தூயகா விரியின் நன்னீர் கொண்டிருக் கோதி யாட்டிக் குங்குமக் குழம்பு சாத்தி இண்டைகொண் டேற நோக்கி ஈசனை எம்பி ரானைக் கண்டனைக் கண்டி ராதே காலத்தைக் கழித்த வாறே.

727

பின்னிலேன் முன்னி லேன்நான் பிறப்பறுத் தருள்செய் வானே என்னிலேன் நாயி னேன்நான் இளங்கதிர்ப் பயலைத் திங்கட் சின்னிலா எறிக்குஞ் சென்னிச் சிவபுரத் தமர ரேறே நின்னலால் களைகண் ஆரே நீறுசே ரகலத் தானே.

728

கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தெள்ளியே னாகி நின்று தேடினேன் நாடிக் கண்டேன் உள்குவார் உள்கிற் றெல்லாம் உடனிருந் தறிதி யென்று வெள்கினேன் வெள்கி நானும் விலாவிறச் சிரித்திட் டேனே.

729

உடம்பெனு மனைய கத்துள் உள்ளமே தகளி யாக மடம்படும் உணர்நெய் யட்டி உயிரெனுந் திரிம யக்கி இடம்படு ஞானத் தீயால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளை தாதை கழலடி காண லாமே.

730

வஞ்சப்பெண் ணரங்கு கோயில் வாளெயிற் றரவந் துஞ்சா வஞ்சப்பெண் இருந்த சூழல் வான்றவழ் மதியந் தோயும் வஞ்சப்பெண் வாழ்க்கை யாளன் வாழ்வினை வாழ லுற்று வஞ்சப்பெண் ணுறக்க மானேன் வஞ்சனேன் என்செய் கேனே.

731

உள்குவார் உள்ளத் தானை உணர்வெனும் பெருமை யானை உள்கினேன் நானுங் காண்பான் உருகினேன் ஊறி யூறி எள்கினேன் எந்தை பெம்மான் இருதலை மின்னு கின்ற கொள்ளிமேல் எறும்பென் னுள்ளம் எங்ஙனங் கூடு மாறே.

732

மோத்தையைக் கண்ட காக்கை போலவல் வினைகள் மொய்த்துன் வார்த்தையைப் பேச வொட்டா மயக்கநான் மயங்கு கின்றேன் சீத்தையைச் சிதம்பு தன்னைச் செடிகொள்நோய் வடிவொன் றில்லா ஊத்தையைக் கழிக்கும் வண்ணம் உணர்வுதா உலக மூர்த்தீ.

733

அங்கத்தை மண்ணுக் காக்கி ஆர்வத்தை உனக்கே தந்து பங்கத்தைப் போக மாற்றிப் பாவித்தேன் பரமா நின்னைs சங்கொத்த மேனிச் செல்வா சாதல்நாள் நாயேன் உன்னை எங்குற்றாய் என்ற போதா இங்குற்றேன் என்கண் டாயே.

734

வெள்ளநீர்ச் சடைய னார்தாம் வினவுவார் போல வந்தென் உள்ளமே புகுந்து நின்றார்க் குறங்குநான் புடைகள் போந்து கள்ளரோ புகுந்தீ ரென்னக் கலந்துதான் நோக்கி நக்கு வெள்ளரோ மென்று நின்றார் விளங்கிளம் பிறைய னாரே.

735

பெருவிரல் இறைதா னூன்ற பிறையெயி றிலங்க அங்காந் தருவரை அனைய தோளான் அரக்கனன் றலறி வீழ்ந்தான் இருவரும் ஒருவ னாய உருவமங் குடைய வள்ளல் திருவடி சுமந்து கொண்டு காண்கநான் திரியு மாறே.