Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.80 கோயில் - திருவிருத்தம்

திருநாவுக்கரசர்

4.80

கோயில் - திருவிருத்தம்

770

பாளையு டைக்கமு கோங்கிப்பன் மாடம்நெ ருங்கியெங்கும் வாளையு டைப்புனல் வந்தெறி வாழ்வயல் தில்லைதன்னுள் ஆளவு டைக்கழற் சிற்றம்ப லத்தரன் ஆடல்கண்டாற் பீளையு டைக்கண்க ளாற்பின்னைப் பேய்த்தொண்டர் காண்பதென்னே.

771

பொருவிடை யொன்றுடைப் புண்ணிய மூர்த்தி புலியதளன் உருவுடை யம்மலை மங்கைம ணாளன் உலகுக்கெல்லாந் திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் திருவடி யைக்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

772

தொடுத்த மலரொடு தூபமுஞ் சாந்துங்கொண் டெப்பொழுதும் அடுத்து வணங்கும் அயனொடு மாலுக்குங் காண்பரியான் பொடிக்கொண் டணிந்துபொன் னாகிய தில்லைச்சிற் றம்பலவன் உடுத்த துகில்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

773

வைச்ச பொருள்நமக் காகுமென் றெண்ணி நமச்சிவாய அச்ச மொழிந்தேன் அணிதில்லை யம்பலத் தாடுகின்ற பிச்சன் பிறப்பிலி பேர்நந்தி உந்தியின் மேலசைத்த கச்சின் அழகுகண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

774

செய்ஞ்ஞின்ற நீல மலர்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் மைஞ்ஞின்ற ஒண்கண் மலைமகள் கண்டு மகிழ்ந்துநிற்க நெய்ஞ்ஞின் றெரியும் விளக்கொத்த நீல மணிமிடற்றான் கைஞ்ஞின்ற ஆடல்கண் டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

775

ஊனத்தை நீக்கி உலகறிய என்னை யாட்கொண்டவன் தேனொத் தெனக்கினி யான்தில்லைச் சிற்றம் பலவனெங்கோன் வானத் தவருய்ய வன்னஞ்சை யுண்டகண் டத்திலங்கும் ஏனத் தெயிறு கண்டாற்பின்னைக் கண்கொண்டு காண்பதென்னே.

776

தெரித்த கணையாற் திரிபுர மூன்றுஞ்செந் தீயின்மூழ்க எரித்த இறைவன் இமையவர் கோமான் இணையடிகள் தரித்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் சிரித்த முகங்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

777

சுற்று மமரர் சுரபதி நின்திருப் பாதமல்லால் பற்றொன் றிலோமென் றழைப்பப் பரவையுள் நஞ்சையுண்டான் செற்றங் கனங்கனைத் தீவிழித் தான்றில்லை யம்பலவன் நெற்றியிற் கண்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

778

சித்தத் தெழுந்த செழுங்கம லத்தன்ன சேவடிகள் வைத்த மனத்தவர் வாழ்கின்ற தில்லைச்சிற் றம்பலவன் முத்தும் வயிரமும் மாணிக்கந் தன்னுள் விளங்கியதூ மத்த மலர்கண்ட கண்கொண்டு மற்றினிக் காண்பதென்னே.

779

தருக்கு மிகுத்துத்தன் றோள்வலி யுன்னித் தடவரையை வரைக்கை களாலெடுத் தார்ப்ப மலைமகள் கோன்சிரித்து அரக்கன் மணிமுடி பத்தும் அணிதில்லை யம்பலவன் நெருக்கி மிதித்த விரல்கண்ட கண்கொண்டு காண்பதென்னே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - திருமூலத்தானநாயகர், சபாநாதர், தேவியார் - சிவகாமியம்மை.