திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.18 திருக்கடம்பந்துறை - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
முற்றி லாமுலை யாளிவ ளாகிலும் அற்றந் தீர்க்கும் அறிவில ளாகிலுங் கற்றைச் செஞ்சடை யான்கடம் பந்துறைப் பெற்ற மூர்தியென் றாளெங்கள் பேதையே.
தனகி ருந்ததோர் தன்மைய ராகிலும் முனகு தீரத் தொழுதெழு மின்களோ கனகப் புன்சடை யான்கடம் பந்துறை நினைய வல்லவர் நீள்விசும் பாள்வரே.
ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி கையுடை யான்கடம் பந்துறைச் சீரி யல்பத்தர் சென்றடை மின்களே.
பண்ணின் இன்மொழி கேட்கும் பரமனை வண்ண நன்மல ரான்பல தேவருங் கண்ண னும்மறி யான்கடம் பந்துறை நண்ண நம்வினை யாயின நாசமே.
மறைகொண் டமனத் தானை மனத்துளே நிறைகொண் டநெஞ்சி னுள்ளுற வைம்மினோ கறைகண் டனுறை யுங்கடம் பந்துறை சிறைகொண் டவினை தீரத் தொழுமினே.
நங்கை பாகம்வைத் தநறுஞ் சோதியைப் பங்க மின்றிப் பணிந்தெழு மின்களோ கங்கைச் செஞ்சடை யான்கடம் பந்துறை அங்க மோதி அரனுறை கின்றதே.
அரிய நான்மறை ஆறங்க மாயைந்து புரியன் தேவர்க ளேத்தநஞ் சுண்டவன் கரிய கண்டத்தி னான்கடம் பந்துறை உரிய வாறு நினைமட நெஞ்சமே.
பூமென் கோதை உமையொரு பாகனை ஓமஞ் செய்தும் உணர்மின்கள் உள்ளத்தாற் காமற் காய்ந்த பிரான்கடம் பந்துறை நாம மேத்தநந் தீவினை நாசமே.
பார ணங்கி வணங்கிப் பணிசெய நார ணன்பிர மன்னறி யாததோர் கார ணன்கடம் பந்துறை மேவிய ஆர ணங்கொரு பாலுடை மைந்தனே.
நூலால் நன்றா நினைமின்கள் நோய்கெடப் பாலான் ஐந்துடன் ஆடும் பரமனார் காலால் ஊன்றுகந் தான்கடம் பந்துறை மேலால் நாஞ்செய்த வல்வினை வீடுமே.