திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.4 திருவண்ணாமலை - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
வட்ட னைமதி சூடியை வானவர் சிட்ட னைத்திரு வண்ணா மலையனை இட்ட னையிகழ்ந் தார்புர மூன்றையும் அட்ட னையடி யேன்மறந் துய்வனோ.
வான னைமதி சூடிய மைந்தனைத் தேன னைத்திரு வண்ணா மலையனை ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த ஆன னையடி யேன்மறந் துய்வனோ.
மத்த னைமத யானை யுரித்தவெஞ் சித்த னைத்திரு வண்ணா மலையனை முத்த னைமுனிந் தார்புர மூன்றெய்த அத்த னையடி யேன்மறந் துய்வனோ.
காற்ற னைக்கலக் கும்வினை போயறத் தேற்ற னைத்திரு வண்ணா மலையனைக் கூற்ற னைக்கொடி யார்புர மூன்றெய்த ஆற்ற னையடி யேன்மறந் துய்வனோ.
மின்ன னைவினை தீர்த்தெனை யாட்கொண்ட தென்ன னைத்திரு வண்ணா மலையனை என்ன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த அன்ன னையடி யேன்மறந் துய்வனோ.
மன்ற னைமதி யாதவன் வேள்விமேற் சென்ற னைத்திரு வண்ணா மலையனை வென்ற னைவெகுண் டார்புர மூன்றையுங் கொன்ற னைக்கொடி யேன்மறந் துய்வனோ.
வீர னைவிட முண்டனை விண்ணவர் தீர னைத்திரு வண்ணா மலையனை ஊர னையுண ரார்புர மூன்றெய்த ஆர னையடி யேன்மறந் துய்வனோ.
கருவி னைக்கடல் வாய்விட முண்டவெந் திருவி னைத்திரு வண்ணா மலையனை உருவி னையுண ரார்புர மூன்றெய்த அருவி னையடி யேன்மறந் துய்வனோ.
அருத்த னையர வைந்தலை நாகத்தைத் திருத்த னைத்திரு வண்ணா மலையனைக் கருத்த னைக்கடி யார்புர மூன்றெய்த அருத்த னையடி யேன்மறந் துய்வனோ.
அரக்க னையல றவ்விர லூன்றிய திருத்த னைத்திரு வண்ணா மலையனை இரக்க மாயென் உடலுறு நோய்களைத் துரக்க னைத்தொண்ட னேன்மறந் துய்வனோ.