Skip to content
Thevaram

ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

5.75 திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை

திருநாவுக்கரசர்

5.75

திருக்குரக்குக்கா - திருக்குறுந்தொகை

751

மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர் சரக்குக் காவித் திரிந்தய ராதுகால் பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக் குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.

752

கட்டா றேகழி காவிரி பாய்வயல் கொட்டா றேபுன லூறு குரக்குக்கா முட்டா றாவடி யேத்த முயல்பவர்க் கிட்டா றாவிட ரோட எடுக்குமே.

753

கைய னைத்துங் கலந்தெழு காவிரி செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல் கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

754

மிக்க னைத்துத் திசையும் அருவிகள் புக்குக் காவிரி போந்த புனற்கரைக் கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா நக்க னைநவில் வார்வினை நாசமே.

755

விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக் கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.

756

மேலை வானவ ரோடு விரிகடல் மாலும் நான்முக னாலுமளப் பொணாக் கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப் பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.

757

ஆல நீழ லமர்ந்த அழகனார் கால னையுதை கொண்ட கருத்தனார் கோல மஞ்ஞைகள் ஆலும் குரக்குக்காப் பால ருக்கருள் செய்வர் பரிவொடே.

758

செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார் அக்க ரையரெம் மாதிபு ராணனார் கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

759

உருகி ஊன்குழைந் தேத்தி யெழுமின்நீர் கரிய கண்டன் கழலடி தன்னையே குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே.

760

இரக்க மின்றி மலையெடுத் தான்முடி உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடங் குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா வரத்த னைப்பெற வானுல காள்வரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - கொந்தளக்கருணைநாதர், தேவியார் - கொந்தளநாயகியம்மை.