திருநாகைக்காரோணம் - திருக்குறுந்தொகை
ஐந்தாம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
5.83 திருநாகைக்காரோணம் - திருக்குறுந்தொகை
திருநாவுக்கரசர்
பாணத் தான்மதில் மூன்று மெரித்தவன் பூணத் தானர வாமை பொறுத்தவன் காணத் தானினி யான்கடல் நாகைக்கா ரோணத் தானென நம்வினை ஓயுமே.
வண்ட லம்பிய வார்சடை ஈசனை விண்ட லம்பணிந் தேத்தும் விகிர்தனைக் கண்ட லங்கமழ் நாகைக்கா ரோணனைக் கண்ட லும்வினை யான கழலுமே.
புனையு மாமலர் கொண்டு புரிசடை நனையு மாமலர் சூடிய நம்பனைக் கனையும் வார்கடல் நாகைக்கா ரோணனை நினைய வேவினை யாயின நீங்குமே.
கொல்லை மால்விடை யேறிய கோவினை எல்லி மாநட மாடும் இறைவனைக் கல்லி னார்மதில் நாகைக்கா ரோணனைச் சொல்ல வேவினை யானவை சோருமே.
மெய்ய னைவிடை யூர்தியை வெண்மழுக் கைய னைக்கடல் நாகைக்கா ரோணனை மைய னுக்கிய கண்டனை வானவர் ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.
அலங்கல் சேர்சடை ஆதி புராணனை விலங்கல் மெல்லியல் பாகம் விருப்பனைக் கலங்கள் சேர்கடல் நாகைக்கா ரோணனை வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.
சினங்கொள் மால்கரி சீறிய ஏறினை இனங்கொள் வானவ ரேத்திய ஈசனைக் கனங்கொள் மாமதில் நாகைக்கா ரோணனை மனங்கொள் வார்வினை யாயின மாயுமே.
அந்த மில்புகழ் ஆயிழை யார்பணிந் தெந்தை யீசனென் றேத்தும் இறைவனைக் கந்த வார்பொழில் நாகைக்கா ரோணனைச் சிந்தை செய்யக் கெடுந்துயர் திண்ணமே.
கருவ னைக்கடல் நாகைக்கா ரோணனை இருவ ருக்கறி வொண்ணா இறைவனை ஒருவ னையுண ரார்புர மூன்றெய்த செருவ னைத்தொழத் தீவினை தீருமே.
கடல்க ழிதழி நாகைக்கா ரோணன்றன் வடவ ரையெடுத் தார்த்த அரக்கனை அடர வூன்றிய பாதம் அணைதரத் தொடர அஞ்சுந் துயக்கறுங் காலனே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காயாரோகணேசுவரர், தேவியார் - நீலயதாட்சியம்மை.