Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.11 திருப்பூவணம் பண் - இந்தளம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.11

திருப்பூவணம் பண் - இந்தளம்

104

திருவுடை யார்திரு மாலய னாலும் உருவுடை யார்உமை யாளையோர் பாகம் பரிவுடை யார்அடை வார்வினை தீர்க்கும் புரிவுடை யார்உறை பூவணம் ஈதோ.

105

எண்ணி இருந்து கிடந்து நடந்தும் அண்ண லெனாநினை வார்வினை தீர்ப்பார் பண்ணிசை யார்மொழி யார்பலர் பாடப் புண்ணிய னார்உறை பூவணம் ஈதோ.

106

தெள்ளிய பேய்பல பூதம வற்றொடு நள்ளிருள் நட்டம தாடல் நவின்றோர் புள்ளுவ ராகும வர்க்கவர் தாமும் புள்ளுவ னார்உறை பூவணம் ஈதோ.

107

நிலனுடை மான்மறி கையது தெய்வக் கனலுடை மாமழு ஏந்தியோர் கையில் அனலுடை யார்அழ கார்தரு சென்னிப் புனலுடை யார்உறை பூவணம் ஈதோ.

108

நடையுடை நல்லெரு தேறுவர் நல்லார் கடைகடை தோறிடு மின்பலி என்பார் துடியிடை நன்மட வாளொடு மார்பில் பொடியணி வார்உறை பூவணம் ஈதோ.

109

மின்னனை யாள்திரு மேனிவி ளங்கவோர் தன்னமர் பாகம தாகிய சங்கரன் முன்னினை யார்புரம் மூன்றெரி யூட்டிய பொன்னனை யான்உறை பூவணம் ஈதோ.

110

மிக்கிறை யேயவன் துன்மதி யாலிட நக்கிறை யேவிர லாலிற வூன்றி நெக்கிறை யேநினை வார்தனி நெஞ்சம் புக்குறை வான்உறை பூவணம் ஈதோ. (*) இப்பதிகத்தில் 8,9-ம் செய்யுட்கள் சிதைந்து போயின.

111

சீரின் மிகப்பொலி யுந்திருப் பூவணம் ஆர விருப்பிட மாஉறை வான்றனை ஊரன் உரைத்தசொன் மாலைகள் பத்திவை பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பூவணநாதர், தேவியார் - மின்னாம்பிகையம்மை.