திருநாவலூர் பண் - நட்டராகம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.17 திருநாவலூர் பண் - நட்டராகம்
சுந்தரமூர்த்தி நாயனார்
கோவலன் நான்முகன் வானவர் கோனுங்குற் றேவல்செய்ய மேவலர் முப்புரந் தீயெழு வித்தவன் ஓரம்பினால் ஏவல னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை யாளுங்கொண்ட நாவல னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
தன்மையி னாலடி யேனைத்தாம் ஆட்கொண்ட நாட்சபைமுன் வன்மைகள் பேசிட வன்றொண்டன் என்பதோர் வாழ்வுதந்தார் புன்மைகள் பேசவும் பொன்னைத்தந் தென்னைப்போ கம்புணர்த்த நன்மையி னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
வேகங்கொண் டோ டிய வெள்விடை ஏறியோர் மெல்லியலை ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார் போகங்கொண் டார்*கடற் கோடியின் மோடியைப் பூண்பதாக நாகங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே. *கடற்கோடி என்பது கோடிக்குழகரென்னுந்தலம்.மோடி என்பது அங்குக் கோயில் கொண்டிருக்கும் துர்க்கை.
அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற் சேவினை ஆட்சிகொண்டார் தஞ்சங்கொண் டாரடிச் சண்டியைத் தாமென வைத்துகந்தார் நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டு நஞ்சங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
உம்பரார் கோனைத்திண் டோ ள்முரித் தாருரித் தார்களிற்றைச் செம்பொனார் தீவண்ணர் தூவண்ண நீற்றரோர் ஆவணத்தால் எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நம்பிரா னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங் கோவலுங் கோத்திட்டையும் வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்டார் ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம் பலத்தே அருக்கனைமுன் நாட்டங்கொண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
தாயவ ளாய்த்தந்தை யாகிச் சாதல் பிறத்தலின்றிப் போயக லாமைத்தன் பொன்னடிக் கென்னைப் பொருந்தவைத்த வேயவ னார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாயக னார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
வாயாடி மாமறை ஓதியோர் வேதிய னாகிவந்து தீயாடி யார்சினக் கேழலின் பின்சென்றோர் வேடுவனாய் வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நாயாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
படமாடு பாம்பணை யானுக்கும் பாவைநல் லாள்தனக்கும் வடமாடு மால்விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்தொருநாள் இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில் வைத்தெனை ஆளுங்கொண்ட நடமாடி யார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத் தான்வலி யைநெரித்தார் அடக்கங்கொண் டாவணங் காட்டிநல் வெண்ணெயூர் ஆளுங்கொண்டார் தடுக்கவொண் ணாததோர் வேழத்தி னையுரித் திட்டுமையை நடுக்கங்கண் டார்க்கிட மாவது நந்திரு நாவலூரே.
நாதனுக் கூர்நமக் கூர்நர சிங்க முனையரையன் ஆதரித் தீசனுக் காட்செயும் ஊரணி நாவலூரென் றோதநற் றக்கவன் றொண்டனா ரூரன் உரைத்ததமிழ் காதலித் துங்கற்றுங் கேட்பவர் தம்வினை கட்டறுமே.
இத்தலம் நடுநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - நாவலீசுவரர், தேவியார் - சுந்தராம்பிகை.