திருக்காளத்தி பண் - நட்டராகம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.26 திருக்காளத்தி பண் - நட்டராகம்
சுந்தரமூர்த்தி நாயனார்
செண்டா டும்விடையாய் சிவனேயென் செழுஞ்சுடரே வண்டாருங் குழலா ளுமைபாகம் மகிழ்ந்தவனே கண்டார் காதலிக்குங் கணநாதனெங் காளத்தியாய் அண்டா உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
இமையோர் நாயகனே இறைவாவென் னிடர்த்துணையே கமையார் கருணையினாய் கருமாமுகில் போல்மிடற்றாய் உமையோர் கூறுடையாய் உருவேதிருக் காளத்தியுள் அமைவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
படையார் வெண்மழுவா பகலோன்பல் லுகுத்தவனே விடையார் வேதியனே விளங்குங்குழைக் காதுடையாய் கடையார் மாளிகைசூழ் கணநாதனெங் காளத்தியாய் உடையாய் உன்னையல்லால் உகந்தேத்த மாட்டேனே.
மறிசேர் கையினனே மதமாவுரி போர்த்தவனே குறியே என்னுடைய குருவேயுன்குற் றேவல்செய்வேன் நெறியே நின்றடியார் நினைக்குந்திருக் காளத்தியுள் அறிவே உன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
செஞ்சே லன்னகண்ணார் திறத்தேகிடந் துற்றலறி நஞ்சேன் நானடியேன் நலமொன்றறி யாமையினாற் துஞ்சேன் நானொருகாற் றொழுதேன்றிருக் காளத்தியாய் அஞ்சா துன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
பொய்யவன் நாயடியேன் புகவேநெறி ஒன்றறியேன் செய்யவ னாகிவந்திங் கிடரானவை தீர்த்தவனே மெய்யவ னேதிருவே விளங்குந்திருக் காளத்தியென் ஐயநுன் றன்னையல்லால் அறிந்தேத்த மாட்டேனே.
கடியேன் காதன்மையாற் கழற்போதறி யாதவென்னுள் குடியாக் கோயில்கொண்ட குளிர்வார்சடை யெங்குழகா முடியால் வானவர்கள் முயங்குந்திருக் காளத்தியாய் அடியேன் உன்னையல்லால் அறியேன்மற் றொருவரையே.
நீறார் மேனியனே நிமலாநினை யன்றிமற்றுக் கூறேன் நாவதனாற் கொழுந்தேயென் குணக்கடலே பாறார் வெண்டலையிற் பலிகொண்டுழல் காளத்தியாய் ஏறே உன்னையல்லால் இனிஏத்த மாட்டேனே.
தளிர்போல் மெல்லடியாள் தனைஆகத் தமர்ந்தருளி எளிவாய் வந்தென்னுள்ளம் புகுதவல்ல எம்பெருமான் களியார் வண்டறையுந் திருக்காளத்தி யுள்ளிருந்த ஒளியே உன்னையல்லால் இனியொன்றும் உணரேனே.
காரா ரும்பொழில்சூழ் கணநாதனெங் காளத்தியுள் ஆரா வின்னமுதை அணிநாவலா ரூரன்சொன்ன சீரூர் செந்தமிழ்கள் செப்புவார்வினை யாயினபோய்ப் பேரா விண்ணுலகம் பெறுவார்பிழைப் பொன்றிலரே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - காளத்திநாதர், தேவியார் - ஞானப்பூங்கோதையம்மை.