ஊர்த்தொகை பண் - பழம்பஞ்சுரம்
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.47 ஊர்த்தொகை பண் - பழம்பஞ்சுரம்
சுந்தரமூர்த்தி நாயனார்
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய் கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறே பாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானே மாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.
கொங்கிற் குறும்பிற் குரக்குத் தளியாய் குழகா குற்றாலா மங்குற் றிரிவாய் வானோர் தலைவா வாய்மூர் மணவாளா சங்கக் குழையார் செவியா அழகா அவியா அனலேந்திக் கங்குற் புறங்காட் டாடீ அடியார் கவலை களையாயே.
நிறைக்காட் டானே நெஞ்சத் தானே நின்றி யூரானே மிறைக்காட் டானே புனல்சேர் சடையாய் அனல்சேர் கையானே மறைக்காட் டானே திருமாந் துறையாய் மாகோ ணத்தானே இறைக்காட் டாயே எங்கட் குன்னை எம்மான் றம்மானே.
ஆரூர் அத்தா ஐயாற் றமுதே அளப்பூர் அம்மானே காரூர் பொழில்கள் புடைசூழ் புறவிற் கருகா வூரானே பேரூர் உறைவாய் பட்டிப் பெருமான் பிறவா நெறியானே பாரூர் பலரும் பரவப் படுவாய் பாசூ ரம்மானே.
மருகல் உறைவாய் மாகா ளத்தாய் மதியஞ் சடையானே அருகற் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே கருகற் குரலாய் வெண்ணிக் கரும்பே கானூர்க் கட்டியே பருகப் பணியாய் அடியார்க் குன்னைப் பவளப் படியானே.
தாங்கூர் பிணிநின் னடியார் மேல அகல அருளாயே வேங்கூர் உறைவாய் விளமர் நகராய் விடையார் கொடியானே நாங்கூர் உறைவாய் தேங்கூர் நகராய் நல்லூர் நம்பானே பாங்கூர் பலிதேர் பரனே பரமா பழனப் பதியானே.
தேனைக் காவல் கொண்டு விண்ட கொன்றைச் செழுந்தாராய் வானைக் காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே ஆனைக் காவில் அரனே பரனே அண்ணா மலையானே ஊனைக் காவல் கைவிட் டுன்னை உகப்பார் உணர்வாரே.
துருத்திச் சுடரே நெய்த்தா னத்தாய் சொல்லாய் கல்லாலா பருத்தி நியமத் துறைவாய் வெயிலாய்ப் பலவாய்க் காற்றானாய் திருத்தித் திருத்தி வந்தென் சிந்தை இடங்கொள் கயிலாயா அருத்தித் துன்னை அடைந்தார் வினைக ளகல அருளாயே.
புலியூர்ச் சிற்றம் பலத்தாய் புகலூர்ப் போதா மூதூரா பொலிசேர் புரமூன் றெரியச் செற்ற புரிபுன் சடையானே வலிசேர் அரக்கன் தடக்கை ஐஞ்ஞான் கடர்த்த மதிசூடீ கலிசேர் புறவிற் கடவூ ராளீ காண அருளாயே.
கைம்மா உரிவை யம்மான் காக்கும் பலவூர் கருத்துன்னி மைம்மாந் தடங்கண் மதுர மன்ன மொழியாள் மடச்சிங்கடி தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் றமிழ்மாலை செம்மாந் திருந்து திருவாய் திறப்பார் சிவலோ கத்தாரே.