Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.50 திருப்புனவாயில் பண் - பழம்பஞ்சுரம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.50

திருப்புனவாயில் பண் - பழம்பஞ்சுரம்

508

சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும் மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர் பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதி பொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.

509

கருது நீமனம் என்னொடு சூளறும் வைகலும் எருது மேற்கொளும் எம்பெரு மாற்கிட மாவது மருத வானவர் வைகும் இடம்மற வேடுவர் பொருது சாத்தொடு பூசல றாப்புன வாயிலே.

510

தொக்கா யமனம் என்னொடு சூளறும் வைகலும் நக்கான் நமை யாளுடை யான்நவி லும்மிடம் அக்கோ டரவார்த் தபிரா னடிக் கன்பராய்ப் புக்கா ரவர் போற்றொழி யாப்புன வாயிலே.

511

வற்கென் றிருத்திகண்டாய் மனமென்னொடு சூளறும் வைகலும் பொற்குன்றஞ் சேர்ந்ததோர் காக்கைபொன் னாமது வேபுகல் கற்குன்றுந் தூறுங் கடுவெளி யுங்கடற் கானல்வாய்ப் புற்கென்று தோன்றிடு மெம்பெரு மான்புன வாயிலே.

512

நில்லாய் மனம் என்னொடு சூளறும் வைகலும் நல்லான் நமை யாளுடை யான்நவி லும்மிடம் வில்லாய்க் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டுபோய்ப் புல்வாய்க் கணம் புக்கொளிக் கும்புன வாயிலே.

513

மறவல் நீமனம் என்னொடு சூளறும் வைகலும் உறவும் ஊழியு மாயபெம் மாற்கிட மாவது பிறவு கள்ளியின் நீள்கவட் டேறித்தன் பேடையைப் புறவங் கூப்பிடப் பொன்புனஞ் சூழ்புன வாயிலே.

514

ஏசற்று நீநினை யென்னொடு சூளறும் வைகலும் பாசற் றவர் பாடிநின் றாடும் பழம்பதி தேசத் தடியவர் வந்திரு போதும் வணங்கிடப் பூசற் றுடிபூச லறாப் புன வாயிலே.

515

கொள்ளி வாயின கூரெயிற் றேனங் கிழிக்கவே தெள்ளி மாமணி தீவிழிக் கும்மிடஞ் செந்தறை கள்ளி வற்றிப்புல் தீந்துவெங் கானங் கழிக்கவே புள்ளி மானினம் புக்கொளிக் கும்புன வாயிலே.

516

எற்றே நினை என்னொடுஞ் சூளறும் வைகலும் மற்றேதும் வேண்டா வல்வினை யாயின மாய்ந்தறக் கற்றூறு கார்க் காட்டிடை மேய்ந்தகார்க் கோழிபோய்ப் புற்றேறிக் கூகூ எனஅழைக் கும்புன வாயிலே.

517

பொடியாடு மேனியன் பொன்புனஞ் சூழ்புன வாயிலை அடியார் அடியன் நாவல வூரன் உரைத்தன மடியாது கற்றிவை யேத்தவல் லார்வினை மாய்ந்துபோய்க் குடியாகப் பாடிநின் றாடவல் லார்க்கில்லை குற்றமே.

இத்தலம் பாண்டிநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பழம்பதிநாயகர், தேவியார் - பரங்கருணைநாயகியம்மை.