Skip to content
Thevaram

ஏழாம் திருமுறை – திருப்பாட்டு

7.53 திருக்கடவூர் மயானம் பண் - பழம்பஞ்சுரம்

சுந்தரமூர்த்தி நாயனார்

7.53

திருக்கடவூர் மயானம் பண் - பழம்பஞ்சுரம்

540

மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோல வருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத் திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும் பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

541

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல் மார்பர் வேத கீதத்தர் கண்ணார் நுதலர் நகுதலையர் கால காலர் கடவூரர் எண்ணார் புரமூன் றெரிசெய்த இறைவ ருமையோ ரொருபாகம் பெண்ணா ணாவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

542

காயும் புலியின் அதளுடையர் கண்டர் எண்டோ ட் கடவூரர் தாயுந் தந்தை பல்லுயிர்க்குந் தாமே யாய தலைவனார் பாயும் விடையொன் றதுவேறிப் பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி பேய்கள் வாழும் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

543

நறைசேர் மலரைங் கணையானை நயனத் தீயாற் பொடிசெய்த இறையா ராவர் எல்லார்க்கும் இல்லை யென்னா தருள்செய்வார் பறையார் முழவம் பாட்டோ டு பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப் பிறையார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

544

கொத்தார் கொன்றை மதிசூடிக் கோள்நா கங்கள் பூணாக மத்த யானை உரிபோர்த்து மருப்பும் ஆமைத் தாலியார் பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆடப் பலிகொள்ளும் பித்தர் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

545

துணிவார் கீளுங் கோவணமுந் துதைந்து சுடலைப் பொடியணிந்து பணிமே லிட்ட பாசுபதர் *பஞ்ச வடிமார் பினர்கடவூர்த் திணிவார் குழையார் புரமூன்றுந் தீவாய்ப் படுத்த சேவகனார் பிணிவார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே. * பஞ்சவடியாவது மயிர்ப்பூணநூல். இது மாவிரதியரென்னும் உட்சமயத்தாரணிவது. மேலும் அவர்களணியுமணி எலும்பினாலாகிய மணிகள். இவற்றை மானக்கஞ்சாறநாயனார் புராணத்து 23-வது திருவிருத்தத்தானுமுணர்க.

546

காரார் கடலின் நஞ்சுண்ட கண்டர் கடவூர் உறைவாணர் தேரார் அரக்கன் போய்வீழ்ந்து சிதைய விரலா லூன்றினார் ஊர்தான் ஆவ துலகேழும் உடையார்க் கொற்றி யூராரூர் பேரா யிரவர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

547

வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்க் கோடார் கேழற் பின்சென்று குறுகி விசயன் தவமழித்து நாடா வண்ணஞ் செருச்செய்து ஆவ நாழி நிலையருள்செய் பீடார் சடையார் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

548

வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரமறுப்பர் ஆழி அளிப்பர் அரிதனக்கன் றானஞ் சுகப்பர் அறமுரைப்பர் ஏழைத் தலைவர் கடவூரில் இறைவர் சிறுமான் மறிக்கையர் பேழைச் சடையர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.

549

மாட மல்கு கடவூரில் மறையோ ரேத்தும் மயானத்துப் பீடை தீர அடியாருக் கருளும் பெருமா னடிகள்சீர் நாடி நாவ லாரூரன் நம்பி சொன்ன நற்றமிழ்கள் பாடு மடியார் கேட்பார்மேற் பாவ மான பறையுமே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பிரமபுரீசுவரர், தேவியார் - மலர்க்குழல்மின்னம்மை.