நம்பி என்ற திருப்பதிகம் பண் - தக்கேசி
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.63 நம்பி என்ற திருப்பதிகம் பண் - தக்கேசி
சுந்தரமூர்த்தி நாயனார்
மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பி கையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி கண்ணு மூன்றுடை யாயொரு நம்பி செய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால் எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம் அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் அமரர் நம்பிகும ரன்முதல் தேவர் தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும் எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
வருந்த அன்றுமத யானை உரித்த வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம் அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம் புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகி இருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரிய நம்பிதெரி யம்மறை அங்கங் கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ் சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும் ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக் குலைத்த நம்பிசிலை யாவரை கையிற் பற்று நம்பிபர மானந்த வெள்ளம் பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால் மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன் மதியி லேன்படு வெந்துயர் எல்லாம் எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய் ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள் தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந் தரித்த நம்பிசம யங்களின் நம்பி தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரை இரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணா உன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே உலகு நம்பிஉரை செய்யும தல்லால் முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்ட தென்னை நம்பிஎம் பிரானாய நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி தோற்றம் ஈறுமுத லாகிய நம்பி வல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார் அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்ற இல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
காண்டு நம்பிகழற் சேவடி என்றுங் கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரை ஆண்டு நம்பியவர் முன்கதி சேர அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத் தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகி ஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம் பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா... ............ ............ ............ ........... ............ ............ ............ ...........
இச்செய்யுளின் பிற்பகுதி சிதைந்து போயிற்று.