திருவாவடுதுறை பண் - தக்கேசி
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.66 திருவாவடுதுறை பண் - தக்கேசி
சுந்தரமூர்த்தி நாயனார்
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக் கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன் இறைவன் எம்பெரு மானென்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன் அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
தெருண்ட வாயிடை நூல்கொண்டு சிலந்தி சித்தி ரப்பந்தர் சிக்கென இயற்றச் சுருண்ட செஞ்சடை யாயது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சிகண் டடியேன் புரண்டு வீழ்ந்துநின் பொன்மலர்ப் பாதம் போற்றி போற்றியென் றன்பொடு புலம்பி அருண்டென் மேல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
திகழும் மாலவன் ஆயிரம் மலரால் ஏத்து வானொரு நீண்மலர் குறையப் புகழி னாலவன் கண்ணிடந் திடலும் புரிந்து சக்கரங் கொடுத்தல்கண் டடியேன் திகழும் நின்றிருப் பாதங்கள் பரவித் தேவ தேவநின் றிறம்பல பிதற்றி அகழும் வல்வினைக் கஞ்சிவந் தடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
வீரத் தாலொரு வேடுவ னாகி விசைத்தோர் கேழலைத் துரந்துசென் றணைந்து போரைத் தான்விச யன்றனக் கன்பாய்ப் புரிந்து வான்படை கொடுத்தல்கண் டடியேன் வாரத் தாலுன நாமங்கள் பரவி வழிபட் டுன்றிற மேநினைந் துருகி ஆர்வத் தோடும்வந் தடியிணை அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
ஒக்க முப்புரம் ஓங்கெரி தூவ உன்னை உன்னிய மூவர்நின் சரணம் புக்கு மற்றவர் பொன்னுல காளப் புகழி னாலருள் ஈந்தமை அறிந்து மிக்க நின்கழ லேதொழு தரற்றி வேதி யாஆதி மூர்த்திநின் அரையில் அக்க ணிந்தஎம் மானுனை அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே. (*) இப்பதிகத்தில் 6-10ம் செய்யுட்கள் சிதைந்து போயின.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.