திருக்கழுக்குன்றம் பண் - நட்டபாடை
ஏழாம் திருமுறை – திருப்பாட்டு
7.81 திருக்கழுக்குன்றம் பண் - நட்டபாடை
சுந்தரமூர்த்தி நாயனார்
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவே நின்ற பாவம் வினைகள் தாம்பல நீங்கவே சென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங் கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
இறங்கிச் சென்று தொழுமின் இன்னிசை பாடியே பிறங்கு கொன்றைச் சடையன் எங்கள் பிரானிடம் நிறங்கள் செய்த மணிகள் நித்திலங் கொண்டிழி கறங்கு வெள்ளை அருவித் தண்கழுக் குன்றமே.
நீள நின்று தொழுமின் நித்தலும் நீதியால் ஆளும் நம்ம வினைகள் அல்கி அழிந்திடத் தோளும் எட்டும் உடைய மாமணிச் சோதியான் காள கண்டன் உறையுந் தண்கழுக் குன்றமே.
வெளிறு தீரத் தொழுமின் வெண்பொடி ஆடியை முளிறி லங்குமழு வாளன் முந்தி உறைவிடம் பிளிறு தீரப் பெருங்கைப் பெய்ம்மதம் மூன்றுடைக் களிறி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.
புலைகள் தீரத் தொழுமின் புன்சடைப் புண்ணியன் இலைகொள் சூலப் படையன் எந்தை பிரானிடம் முலைகள் உண்டு தழுவிக் குட்டி யொடுமுசுக் கலைகள் பாயும் புறவில் தண்கழுக் குன்றமே.
மடமு டைய அடியார் தம்மனத் தேஉற விடமு டைய மிடறன் விண்ணவர் மேலவன் படமு டைய அரவன் றான்பயி லும்மிடங் கடமு டைய புறவில் தண்கழுக் குன்றமே.
ஊன மில்லா அடியார் தம்மனத் தேஉற ஞான மூர்த்தி நட்ட மாடிநவி லும்மிடந் தேனும் வண்டும் மதுவுண் டின்னிசை பாடியே கான மஞ்சை உறையுந் தண்கழுக் குன்றமே.
அந்த மில்லா அடியார் தம்மனத் தேஉற வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன் சிந்தை செய்த மலர்கள் நித்தலுஞ் சேரவே கந்தம் நாறும் புறவில் தண்கழுக் குன்றமே.
பிழைகள் தீரத் தொழுமின் பின்சடைப் பிஞ்ஞகன் குழைகொள் காதன் குழகன் றானுறை யும்மிடம் மழைகள் சாலக் கலித்து நீடுயர் வேயவை குழைகொள் முத்தஞ் சொரியுந் தண்கழுக் குன்றமே.
பல்லில் வெள்ளைத் தலையன் றான்பயி லும்மிடம் கல்லில் வெள்ளை அருவித் தண்கழுக் குன்றினை மல்லின் மல்கு திரள்தோள் ஊரன் வனப்பினாற் சொல்லல் சொல்லித் தொழுவா ரைத்தொழு மின்களே.
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வேதகிரியீசுவரர், தேவியார் - பெண்ணினல்லாளம்மை.