Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி

மாணிக்கவாசகர்

20. திருப்பள்ளியெழுச்சி - திரோதான சுத்தி (திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம் )

368

போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

369

அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருனையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.

370

கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

371

இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

372

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

373

பப்பற விட்டிருந்து உணரும்நின் அடியுaர் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்பறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.

374

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.

375

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே.

376

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.

377

புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும் அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.