Skip to content
Thiruvasagam & Thirukkovaiyar

எட்டாம் திருமுறை – திருவாசகம், திருக்கோவையார்

31. கண்டபத்து - நிருத்த தரிசனம்

மாணிக்கவாசகர்

31. கண்டபத்து - நிருத்த தரிசனம் (தில்லையில் அருளியது - தரவு கொச்சகக் கலிப்பா)

475

இந்திரிய வயமயங்கி இறப்பதற்கே காரணமாய் அந்தரமே திரிந்துபோய் அருநகரில் வீழ்வேற்குச் சிந்தைதனைத் தெளிவித்துச் சிவமாக்கி எனையாண்ட அந்தமிலா ஆனந்தம் அணிகொள் தில்லை கண்டேனே.

476

வினைப்பிறவி என்கின்ற வேதனையில் அகப்பட்டுத் தனைச்சிறுதும் நினையாதே தளர்வெய்திக் கிடப்பேனை எனைப்பெரிதும் ஆட்கொண்டேன் பிறப்பறுத்த இணையிலியை அனைத்துலகுந் தொழுந்தில்லை அம்பலத்தே கண்டேனே.

477

உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்தென் உளம்மன்னிக் கருத்திருத்தி ஊன்புக்குக் கருணையினால் ஆண்டுகொண்ட திருத்திருத்தி மேயானைத் தித்திக்குஞ் சிவபதத்தை அருத்தியினால் நாயடியேன் அணிகொள்தில்லை கண்டேனே.

478

கல்லாத புல்லறிவிற் கடைப்பட்ட நாயேனை வல்லாகி னாய்வந்து வனப்பெய்தி யிருக்கும் வண்ணம் பல்லோருங் காண என்றன் பசுபாசம் அறுத்தானை எல்லோரும் இறைஞ்சுதில்லை அம்பலத்தே கண்டேனே.

479

சாதிகுலம் பிறப்பென்னுஞ் சுழிப்பட்டுத் தடுமாறும் ஆதமிலி நாயேனை அல்லலுறுந் தாட்கொண்டு பேதைகுணம் பிறருருவம் யானெனதென் னுரைமாய்த்துக் கோதிலமு தானானைக் குலாவுதில்லை கண்டேனே.

480

பிறவிதனை அறமாற்றிப் பிணிமூப்பென் றிவையிரண்டும் உறவினொடும் ஒழியச்சென் றுலகுடைய ஒருமுதலைச் செறிபொழில்சூழ் தில்லைநகர்த் திருச்சிற்றம்பலம் மன்னி மறையவரும் வானவரும் வணங்கிடநான் கண்டேனே.

481

பத்திமையும் பரிசுமிலாப் பசுபாசம் அறுத்தருளிப் பித்தனிவன் எனஎன்னை ஆக்குவித்துப் பேராமே சித்தமெனுந் திண்கயிற்றால் திருப்பாதங் கட்டுவித்த வித்தகனார் வினையாடல் விளங்குதில்லை கண்டேனே.

482

அளவிலாப் பாவகத்தால் அமுக்குண்டிங் கறிவின்றி விளைவொன்றும் அறியாதே வெறுவியனாய்க் கிடப்பேனுக்கு அளவிலா ஆனந்தம் அளித்தென்னை ஆண்டானைக் களவிலா வானவருக் தொழுதில்லை கண்டேனே.

483

பாங்கினொடு பரிசொன்றும் அறியாத நாயேனை ஓங்கியுளத் தொளிவளர உலப்பிலா அன்பருளி வாங்கிவினை மலம்அறுத்து வான்கருணை தந்தானை நான்குமறை பயில்தில்லை அம்பலத்தே கண்டேனே.

484

பூதங்கள் ஐந்தாகிப் புலனாகிப் பொருளாகிப் பேதங்கள் அனைத்துமாய்ப் பேதமில்லாப் பெருமையனைக் கேதங்கள் கெடுத்தாண்ட கிளரொளியை மரகதத்தை வேதங்கள் தொழுதேத்தும் விளங்குதில்லை கண்டேனே.