Skip to content
Thevaram

முதல் திருமுறை – திருக்கடைக்காப்பு

1.55 திருமாற்பேறு

திருஞானசம்பந்தர்

1.55

திருமாற்பேறு பண் - பழந்தக்கராகம்

591

ஊறி யார்தரு நஞ்சினை யுண்டுமை நீறு சேர்திரு மேனியர் சேறு சேர்வயல் தென்திரு மாற்பேற்றின் மாறி லாமணி கண்டரே.

592

தொடையார் மாமலர் கொண்டிரு போதும்மை அடைவா ராமடி கள்ளென மடையார் நீர்மல்கு மன்னிய மாற்பே றுடையீ ரேயுமை யுள்கியே.

593

பையா ரும்மர வங்கொடு வாட்டிய கையா னென்று வணங்குவர் மையார் நஞ்சுண்டு மாற்பேற் றிருக்கின்ற ஐயா நின்னடி யார்களே.

594

சால மாமலர் கொண்டு சரணென்று மேலை யார்கள் விரும்புவர் மாலி னார்வழி பாடுசெய் மாற்பேற்று நீல மார்கண்ட நின்னையே.

595

மாறி லாமணி யேயென்று வானவர் ஏற வேமிக ஏத்துவர் கூற னேகுல வுந்திரு மாற்பேற்றின் நீற னேயென்று நின்னையே.

596

உரையா தாரில்லை யொன்றுநின் தன்மையைப் பரவா தாரில்லை நாள்களும் திரையார் பாலியின் தென்கரை மாற்பேற் றரையா னேயருள் நல்கிடே. (*) (*) இப்பதிகத்தில் 7-ம் செய்யுள் மறைந்து போயிற்று.

597

அரச ளிக்கும் அரக்கன் அவன்றனை உரைகெ டுத்தவன் ஒல்கிட வரமி குத்தவெம் மாற்பேற் றடிகளைப் பரவி டக்கெடும் பாவமே.

598

இருவர் தேவருந் தேடித் திரிந்தினி ஒருவ ராலறி வொண்ணிலன் மருவு நீள்கழல் மாற்பேற் றடிகளைப் பரவு வார்வினை பாறுமே.

599

தூசு போர்த்துழல் வார்கையில் துற்றுணும் நீசர் தம்முரை கொள்ளெலுந் தேசம் மல்கிய தென்திரு மாற்பேற்றின் ஈச னென்றெடுத் தேத்துமே.

600

மன்னி மாலொடு சோமன் பணிசெயும் மன்னும் மாற்பேற் றடிகளை மன்னு காழியுள் ஞானசம் பந்தன்சொல் பன்ன வேவினை பாறுமே.

இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மால்வணங்குமீசர், தேவியார் - கருணைநாயகியம்மை.