திருநாகேச்சரம் பண் - செவ்வழி
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.119 திருநாகேச்சரம்
திருஞானசம்பந்தர்
தழைகொள்சந்தும் மகிலும் மயில்பீலியுஞ் சாதியின் பழமுமுந்திப் புனல்பாய் பழங்காவிரித் தென்கரை நழுவில்வானோர் தொழநல்கு சீர்மல்கு நாகேச்சரத் தழகர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கழ காகுமே.
பெண்ணோர்பாகம் மடையச் சடையிற்புனல் பேணிய வண்ணமான பெருமான் மருவும்மிடம் மண்ணுளார் நண்ணிநாளுந் தொழுதேத்தி நன்கெய்து நாகேச்சரங் கண்ணினாற் காணவல்லா ரவர்கண்ணுடை யார்களே.
குறவர்கொல்லைப் புனங்கொள்ளை கொண்டும்மணி குலவுநீர் பறவையாலப் பரக்கும் பழங்காவிரித் தென்கரை நறவநாறும் பொழில்சூழ்ந் தழகாய நாகேச்சரத் திறைவர்பாதந் தொழுதேத்த வல்லார்க்கிட ரில்லையே.
கூசநோக்காது முன்சொன்ன பொய்கொடுவினை குற்றமும் நாசமாக்கும் மனத்தார்கள் வந்தாடு நாகேச்சரந் தேசமாக்குந் திருக்கோயி லாக்கொண்ட செல்வன்கழல் நேசமாக்குந் திறத்தார் அறத்தார் நெறிப்பாலரே.
வம்புநாறும் மலரும்மலைப் பண்டமுங் கொண்டுநீர் பைம்பொன்வாரிக் கொழிக்கும் பழங்காவிரித் தென்கரை நம்பன்நாளும் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் உம்பர்வானோர் தொழச்சென் றுடனாவதும் உண்மையே.
காளமேகந் நிறக்கால னோடந்தகன் கருடனும் நீளமாய்நின் றெய்தகாம னும்பட்டன நினைவுறின் நாளுநாதன் அமர்கின்ற நாகேச்சரம் நண்ணுவார் கோளுநாளுந் தீயவேனும் நன்காங்குறிக் கொண்மினே.
வேயுதிர்முத் தொடுமத்த யானைமருப் பும்விராய் பாய்புனல்வந் தலைக்கும் பழங்காவிரித் தென்கரை நாயிறுந்திங் களுங்கூடி வந்தாடு நாகேச்சரம் மேயவன்றன் அடிபோற்றி யென்பார் வினைவீடுமே.
இலங்கைவேந்தன் சிரம்பத் திரட்டியெழில் தோள்களும் மலங்கிவீழம் மலையா லடர்த்தானிட மல்கிய நலங்கொள்சிந்தை யவர்நாடொறும் நண்ணும் நாகேச்சரம் வலங்கொள்சிந்தை யுடையார் இடராயின மாயுமே.
கரியமாலும் அயனும் மடியும்முடி காண்பொணா எரியதாகிந் நிமிர்ந்தான் அமரும்மிட மீண்டுகா விரியின்நீர்வந் தலைக்குங் கரைமேவு நாகேச்சரம் பிரிவிலாதவ் வடியார்கள் வானிற் பிரியார்களே.
தட்டிடுக்கி யுறிதூக்கிய கையினர் சாக்கியர் கட்டுரைக்கும் மொழிகொள்ளலும் வெள்ளிலங் காட்டிடை நட்டிருட்கண் நடமாடிய நாதன் நாகேச்சரம் மட்டிருக்கும் மலரிட்டடி வீழ்வது வாய்மையே.
கந்தநாறும் புனற்காவிரித் தென்கரை கண்ணுதல் நந்திசேருந் திருநாகேச் சரத்தின்மேன் ஞானசம் பந்தன்நாவிற் பனுவல்லிவை பத்தும்வல் லார்கள்போய் எந்தையீசன் னிருக்கும் முலகெய்த வல்லார்களே.