திருமூக்கீச்சரம் பண் - செவ்வழி
இரண்டாம் திருமுறை – திருக்கடைக்காப்பு
2.120 திருமூக்கீச்சரம்
திருஞானசம்பந்தர்
சாந்தம்வெண்ணீ றெனப்பூசி வெள்ளஞ்சடை வைத்தவர் காந்தளாரும் விரலேழை யோடாடிய காரணம் ஆய்ந்துகொண்டாங் கறியந் நிறைந்தாரவ ரார்கொலோ வேந்தன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மெய்ம்மையே.
வெண்டலையோர் கலனாப் பலிதேர்ந்து விரிசடைக் கொண்டலாரும் புனல்சேர்த் துமையா ளொடுங்கூட்டமா விண்டவர்தம் மதிலெய்தபின் வேனில்வேள் வெந்தெழக் கண்டவர்மூக் கீச்சரத்தெம் மடிகள்செய் கன்மமே.
மருவலார்தம் மதிலெய் ததுவும்மான் மதலையை உருவிலாரவ் வெரியூட் டியதும்முல குண்டதால் செருவிலாரும் புலிசெங் கயலானையி னான்செய்த பொருவின்மூக் கீச்சரத்தெம் மடிகள்செயும் பூசலே.
அன்னமன்னந் நடைச்சாய லாளொடழ கெய்தவே மின்னையன்ன சடைக்கங்கை யாள்மேவிய காரணந் தென்னன்கோழி யெழில்வஞ்சியும் ஓங்குசெங் கோலினான் மன்னன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் மாயமே.
விடமுனாரவ் வழல்வாய தோர்பாம்பரை வீக்கியே நடமுனாரவ் வழலாடுவர் பேயொடு நள்ளிருள் வடமனீடு புகழ்ப்பூழியன் தென்னவன் கோழிமன் அடல்மன்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
வெந்தநீறு மெய்யிற்பூ சுவராடுவர் வீங்கிருள் வந்தெனாரவ் வளைகொள்வது மிங்கொரு மாயமாம் அந்தண்மா மானதன்னேரியன் செம்பிய னாக்கிய எந்தைமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரேதமே.
அரையிலாருங் கலையில்லவ னாணொடு பெண்ணுமாய் உரையிலாரவ் வழலாடுவ ரொன்றலர் காண்மினோ விரவலார்தம் மதில்மூன்றுடன் வெவ்வழ லாக்கினான் அரையான்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோ ரச்சமே.
ஈர்க்குநீர்செஞ் சடைக்கேற்ற துங்கூற்றை யுதைத்ததுங் கூர்க்குநன் மூவிலைவேல் வலனேந்திய கொள்கையும் ஆர்க்கும்வாயான் அரக்கன் னுரத்தைந்நெரித் தவ்வடல் மூர்க்கன்மூக்கீச் சரத்தடிகள் செய்யாநின்ற மொய்ம்பதே.
நீருளாரும் மலர்மேல் உறைவான் நெடுமாலுமாய்ச் சீருளாருங் கழல்தேட மெய்த்தீத் திரளாயினான் சீரினாலங் கொளிர்தென்னவன் செம்பியன் வல்லவன் சேருமூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் செம்மையே.
வெண்புலான்மார் பிடுதுகிலினர் வெற்றரை யுழல்பவர் உண்பினாலே யுரைப்பார் மொழியூனம தாக்கினான் ஒண்புலால்வேல் மிகவல்லவ னோங்கெழில் கிள்ளிசேர் பண்பின்மூக்கீச் சரத்தடிகள் செய்கின்றதோர் பச்சையே.
மல்லையார்மும் முடிமன்னர் மூக்கீச்சரத் தடிகளைச் செல்வராக நினையும்படி சேர்த்திய செந்தமிழ் நல்லராய்வாழ் பவர்காழியுள் ஞானசம் பந்தன சொல்லவல்லா ரவர்வானுல காளவும் வல்லரே.