நமச்சிவாயப்பதிகம் பண் - காந்தாரம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.11 நமச்சிவாயப்பதிகம்
திருநாவுக்கரசர்
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே.
பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினனுக் கருங்கலம் அரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே.
விண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே.
இடுக்கண்பட் டிருக்கினும் இரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம் அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளின் நாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே.
வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கலம் அருமறை யாறங்கந் திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கலம் நமச்சி வாயவே.
சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமிலன் நாடொறு நல்கு வான்நலன் குலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே.
வீடினார் உலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே.
இல்லக விளக்கது இருள் கெடுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே.
முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாதல் திண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே.
மாப்பிணை தழுவிய மாதோர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே.
இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.