திருக்கெடிலவாணர் பண் - காந்தாரம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.10 திருக்கெடிலவாணர்
திருநாவுக்கரசர்
முளைக்கதிர் இளம்பிறை மூழ்க வெள்ளநீர் வளைத்தெழு சடையினர் மழலை வீணையர் திளைத்ததோர் மான்மழுக் கையர் செய்யபொன் கிளைத்துழித் தோன்றிடுங் கெடில வாணரே.
ஏறினர் ஏறினை ஏழை தன்னொரு கூறினர் கூறினர் வேதம் அங்கமும் ஆறினர் ஆறிடு சடையர் பக்கமுங் கீறின வுடையினர் கெடில வாணரே.
விடந்திகழ் கெழுதரு மிடற்றர் வெள்ளைநீ றுடம்பழ கெழுதுவர் முழுதும் வெண்ணிலாப் படந்தழ கெழுதரு சடையிற் பாய்புனல் கிடந்தழ கெழுதிய கெடில வாணரே.
விழுமணி அயிலெயிற் றம்பு வெய்யதோர் கொழுமணி நெடுவரை கொளுவிக் கோட்டினார் செழுமணி மிடற்றினர் செய்யர் வெய்யதோர் கெழுமணி அரவினர் கெடில வாணரே.
குழுவினர் தொழுதெழும் அடியர் மேல்வினை தழுவின கழுவுவர் பவள மேனியர் மழுவினர் மான்மறிக் கையர் மங்கையைக் கெழுவின யோகினர் கெடில வாணரே.
அங்கையில் அனலெரி யேந்தி யாறெனும் மங்கையைச் சடையிடை மணப்பர் மால்வரை நங்கையைப் பாகமு நயப்பர் தென்றிசைக் கெங்கைய தெனப்படுங் கெடில வாணரே.
கழிந்தவர் தலைகல னேந்திக் காடுறைந் திழிந்தவ ரொருவரென் றெள்க வாழ்பவர் வழிந்திழி மதுகர மிழற்ற மந்திகள் கிழிந்ததேன் நுகர்தருங் கெடில வாணரே.
கிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக் கிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக் கிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையும் ஏங்கவே கிடந்துதான் நகுதலைக் கெடில வாணரே.
வெறியுறு விரிசடை புரள வீசியோர் பொறியுறு புலியுரி யரைய தாகவும் நெறியுறு குழலுமை பாக மாகவுங் கிறிபட உழிதர்வர் கெடில வாணரே.
பூண்டதோர் அரக்கனைப் பொருவில் மால்வரைத் தூண்டுதோ ளவைபட அடர்த்த தாளினார் ஈண்டுநீர்க் கமலவாய் மேதி பாய்தரக் கீண்டுதேன் சொரிதருங் கெடில வாணரே.