திருஆப்பாடி - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.48 திருஆப்பாடி - திருநேரிசை
திருநாவுக்கரசர்
கடலகம் ஏழி னோடும் புவனமுங் கலந்த விண்ணும் உடலகத் துயிரும் பாரும் ஒள்ளழ லாகி நின்று தடமலர்க் கந்த மாலை தண்மதி பகலு மாகி மடலவிழ் கொன்றை சூடி மன்னும்ஆப் பாடி யாரே.
ஆதியும் அறிவு மாகி அறிவினுட் செறிவு மாகிச் சோதியுட் சுடரு மாகித் தூநெறிக் கொருவ னாகிப் பாதியிற் பெண்ணு மாகிப் பரவுவார் பாங்க னாகி வேதியர் வாழுஞ் சேய்ஞல் விரும்பும்ஆப் பாடி யாரே.
எண்ணுடை இருக்கு மாகி யிருக்கினுட் பொருளு மாகிப் பண்ணொடு பாடல் தன்னைப் பரவுவார் பாங்க னாகிக் கண்ணொரு நெற்றி யாகிக் கருதுவார் கருத லாகாப் பெண்ணொரு பாக மாகிப் பேணும்ஆப் பாடி யாரே.
அண்டமார் அமரர் கோமான் ஆதியெம் அண்ணல் பாதங் கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக் கண்டவன் தாதை பாய்வான் காலற எறியக் கண்டு தண்டியார்க் கருள்கள் செய்த தலைவர்ஆப் பாடி யாரே.
சிந்தையுந் தெளிவு மாகித் தெளிவினுட் சிவமு மாகி வந்தநற் பயனு மாகி வாணுதல் பாக மாகி மந்தமாம் பொழில்கள் சூழ்ந்த மண்ணித்தென் கரைமேல் மன்னி அந்தமோ டளவி லாத அடிகள்ஆப் பாடி யாரே.
வன்னிவா ளரவு மத்தம் மதியமும் ஆறுஞ் சூடி மின்னிய உருவாஞ் சோதி மெய்ப்பொருட் பயனு மாகிக் கன்னியோர் பாக மாகிக் கருதுவார் கருத்து மாகி இன்னிசை தொண்டர் பாட இருந்தஆப் பாடி யாரே.
உள்ளுமாய்ப் புறமு மாகி உருவுமாய் அருவு மாகி வெள்ளமாய்க் கரையு மாகி விரிகதிர் ஞாயி றாகிக் கள்ளமாய்க் கள்ளத் துள்ளார் கருத்துமாய் அருத்த மாகி அள்ளுவார்க் கள்ளல் செய்திட் டிருந்தஆப் பாடி யாரே.
மயக்கமாய்த் தெளிவு மாகி மால்வரை வளியு மாகித் தியக்கமாய் ஒருக்க மாகிச் சிந்தையுள் ஒன்றி நின்று இயக்கமாய் இறுதி யாகி எண்டிசைக் கிறைவ ராகி அயக்கமாய் அடக்க மாய ஐவர்ஆப் பாடி யாரே.
ஆரழல் உருவ மாகி அண்டமேழ் கடந்த எந்தை பேரொளி உருவி னானைப் பிரமனும் மாலுங் காணாச் சீரவை பரவி யேத்திச் சென்றடி வணங்கு வார்க்குப் பேரருள் அருளிச் செய்வார் பேணும்ஆப் பாடி யாரே.
திண்டிறல் அரக்க னோடிச் சீகயி லாயந் தன்னை எண்டிறல் இலனு மாகி எடுத்தலும் ஏழை அஞ்ச விண்டிறல் நெறிய வூன்றி மிகக்கடுத் தலறி வீழப் பண்டிறல் கேட்டு கந்த பரமர்ஆப் பாடி யாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - பாலுவந்தநாயகர், தேவியார் - பெரியநாயகியம்மை.