Skip to content
Thevaram

நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்

4.49 திருக்குறுக்கை - திருநேரிசை

திருநாவுக்கரசர்

4.49

திருக்குறுக்கை - திருநேரிசை

476

ஆதியிற் பிரம னார்தாம் அர்ச்சித்தார் அடியி ணைக்கீழ் ஓதிய வேத நாவர் உணருமா றுணர லுற்றார் சோதியுட் சுடராய்த் தோன்றிச் சொல்லினை யிறந்தார் பல்பூக் கோதிவண் டறையுஞ் சோலைக் குறுக்கைவீ ரட்ட னாரே.

477

நீற்றினை நிறையப் பூசி நித்தலும் நியமஞ் செய்து ஆற்றுநீர் பூரித் தாட்டும் அந்தண னாரைக் கொல்வான் சாற்றுநாள் அற்ற தென்று தருமரா சற்காய் வந்த கூற்றினைக் குமைப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

478

தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தாபர மணலாற் கூப்பி அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

479

சிலந்தியும் ஆனைக் காவிற் திருநிழற் பந்தர் செய்து உலந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாகக் கலந்தநீர்க் காவி ரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

480

ஏறுடன் ஏழ டர்த்தான் எண்ணியா யிரம்பூக் கொண்டு ஆறுடைச் சடையி னானை அர்ச்சித்தான் அடியி ணைக்கீழ் வேறுமோர் பூக்கு றைய மெய்ம்மலர்க் கண்ணை மிண்டக் கூறுமோர் ஆழி ஈந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

481

கல்லினால் எறிந்து கஞ்சி தாமுணுஞ் சாக்கி யனார் நெல்லினார் சோறு ணாமே நீள்விசும் பாள வைத்தார் எல்லியாங் கெரிகை ஏந்தி எழில்திகழ் நட்ட மாடிக் கொல்லியாம் பண்ணு கந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே.

482

காப்பதோர் வில்லும் அம்புங் கையதோர் இறைச்சிப் பாரந் தோற்பெருஞ் செருப்புத் தொட்டுத் தூயவாய்க் கலசம் ஆட்டித் தீப்பெருங் கண்கள் செய்யக் குருதிநீர் ஒழுகத் தன்கண் கோப்பதும் பற்றிக் கொண்டார் குறுக்கைவீ ரட்ட னாரே.

483

நிறைமறைக் காடு தன்னில் நீண்டெரி தீபந் தன்னைக் கறைநிறத் தெலிதன் மூக்குச் சுட்டிடக் கனன்று தூண்ட நிறைகடல் மண்ணும் விண்ணும் நீண்டவா னுலக மெல்லாங் குறைவறக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

484

அணங்குமை பாக மாக அடக்கிய ஆதி மூர்த்தி வணங்குவார் இடர்கள் தீர்க்கும் மருந்துநல் அருந்த வத்த கணம்புல்லர்க் கருள்கள் செய்து காதலாம் அடியார்க் கென்றுங் குணங்களைக் கொடுப்பர் போலுங் குறுக்கைவீ ரட்ட னாரே.

485

எடுத்தனன் எழிற் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை அடுத்தொரு விரலால் ஊன்ற அலறிப்போய் அவனும் வீழ்ந்து விடுத்தனன் கைந ரம்பால் வேதகீ தங்கள் பாடக் கொடுத்தனர் கொற்ற வாணாள் குறுக்கைவீ ரட்ட னாரே.

இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வீரட்டேசுவரர், தேவியார் - ஞானாம்பிகையம்மை.