திருவலம்புரம் - திருநேரிசை
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.55 திருவலம்புரம் - திருநேரிசை
திருநாவுக்கரசர்
தெண்டிரை தேங்கி ஓதஞ் சென்றடி வீழுங் காலைத் தொண்டிரைத் தண்டர் கோனைத் தொழுதடி வணங்கி யெங்கும் வண்டுகள் மதுக்கள் மாந்தும் வலம்புரத் தடிகள் தம்மைக் கொண்டுநற் கீதம் பாடக் குழகர்தாம் இருந்த வாறே.
மடுக்களில் வாளை பாய வண்டினம் இரிந்த பொய்கைப் பிடிக்களி றென்னத் தம்மிற் பிணைபயின் றணைவ ரால்கள் தொடுத்தநன் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி யேத்த வடித்தடங் கண்ணி பாகர் வலம்புரத் திருந்த வாறே.
தேனுடை மலர்கள் கொண்டு திருந்தடி பொருந்தச் சேர்த்தி ஆனிடை அஞ்சுங் கொண்டு அன்பினால் அமர வாட்டி வானிடை மதியஞ் சூடும் வலம்புரத் தடிகள் தம்மை நானடைந் தேத்தப் பெற்று நல்வினைப் பயனுற் றேனே.
முளைஎயிற் றிளநல் ஏனம் பூண்டுமொய் சடைகள் தாழ வளைஎயிற் றிளைய நாகம் வலித்தரை யிசைய வீக்கிப் புளைகைய போர்வை போர்த்துப் புனலொடு மதியஞ் சூடி வளைபயில் இளைய ரேத்தும் வலம்புரத் தடிகள் தாமே.
சுருளுறு வரையின் மேலாற் றுளங்கிளம் பளிங்கு சிந்த இருளுறு கதிர்நு ழைந்த இளங்கதிர்ப் பசலைத் திங்கள் அருளுறும் அடிய ரெல்லாம் அங்கையின் மலர்கள் ஏந்த மருளுறு கீதங் கேட்டார் வலம்புரத் தடிக ளாரே.
நினைக்கின்றேன் நெஞ்சு தன்னால் நீண்டபுன் சடையி னானே அனைத்துடன் கொண்டு வந்தங் கன்பினால் அமைய வாட்டிப் புனைக்கின்றேன் பொய்ம்மை தன்னை மெய்ம்மையைப் புணர மாட்டேன் எனக்குநான் செய்வ தென்னே இனிவலம் புரவ னீரே.
செங்கயல் சேல்கள் பாய்ந்து தேம்பழ மினிய நாடித் தங்கயந் துறந்து போந்து தடம்பொய்கை அடைந்து நின்று கொங்கையர் குடையுங் காலைக் கொழுங்கனி யழுங்கி னாராம் மங்கல மனையின் மிக்கார் வலம்புரத் தடிக ளாரே.
அருகெலாங் குவளை செந்நெல் அகவிலை யாம்பல் நெய்தல் தெருவெலாந் தெங்கு மாவும் பழம்விழும் படப்பை யெல்லாங் குருகினங் கூடி யாங்கே கும்மலித் திறகு லர்த்தி மருவலா மிடங்கள் காட்டும் வலம்புரத் தடிக ளாரே.
கருவரை யனைய மேனிக் கடல்வண்ண னவனுங் காணான் திருவரை யனைய பூமேல் திசைமுக னவனுங் காணான் ஒருவரை உச்சி ஏறி ஓங்கினார் ஓங்கி வந்து அருமையில் எளிமை யானார் அவர்வலம் புரவ னாரே.
வாளெயி றிலங்க நக்கு வளர்கயி லாயந் தன்னை ஆள்வலி கருதிச் சென்ற அரக்கனை வரைக்கீ ழன்று தோளொடு பத்து வாயுந் தொலைந்துடன் அழுந்த வூன்றி ஆண்மையும் வலியுந் தீர்ப்பார் அவர்வலம் புரவ னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - வலம்புரநாதர், தேவியார் - வடுவகிர்க்கண்ணம்மை.