திருஆவடுதுறை - திருநேரிசை பண் - காந்தாரம்
நான்காம் திருமுறை – திருநாவுக்கரசு பதிகம்
4.56 திருஆவடுதுறை - திருநேரிசை
திருநாவுக்கரசர்
மாயிரு ஞால மெல்லாம் மலரடி வணங்கும் போலும் பாயிருங் கங்கை யாளைப் படர்சடை வைப்பர் போலுங் காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன் ஆயிரங் கொடுப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
மடந்தை பாகத்தர் போலும் மான்மறிக் கையர் போலும் குடந்தையிற் குழகர் போலுங் கொல்புலித் தோலர் போலுங் கடைந்தநஞ் சுண்பர் போலுங் காலனைக் காய்வர் போலும் அடைந்தவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
உற்றநோய் தீர்ப்பர் போலும் உறுதுணை யாவர் போலுஞ் செற்றவர் புரங்கள் மூன்றுந் தீயெழச் செறுவர் போலுங் கற்றவர் பரவி யேத்தக் கலந்துலந் தலந்து பாடும் அற்றவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
மழுவமர் கையர் போலும் மாதவள் பாகர் போலும் எழுநுனை வேலர் போலும் என்புகொண் டணிவர் போலுந் தொழுதெழுந் தாடிப் பாடித் தோத்திரம் பலவுஞ் சொல்லி அழுமவர்க் கன்பர் போலும் ஆவடு துறைய னாரே.
பொடியணி மெய்யர் போலும் பொங்குவெண் ணூலர் போலுங் கடியதோர் விடையர் போலுங் காமனைக் காய்வர் போலும் வெடிபடு தலையர் போலும் வேட்கையாற் பரவுந் தொண்டர் அடிமையை அளப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
வக்கரன் உயிரை வவ்வக் கண்மலர் கொண்டு போற்றச் சக்கரங் கொடுப்பர் போலுந் தானவர் தலைவர் போலுந் துக்கமா மூடர் தம்மைத் துயரிலே வீழ்ப்பர் போலும் அக்கரை ஆர்ப்பர் போலும் ஆவடு துறைய னாரே.
விடைதரு கொடியர் போலும் வெண்புரி நூலர் போலும் படைதரு மழுவர் போலும் பாய்புலித் தோலர் போலும் உடைதரு கீளர் போலும் உலகமு மாவர் போலும் அடைபவர் இடர்கள் தீர்க்கும் ஆவடு துறைய னாரே.
முந்திவா னோர்கள் வந்து முறைமையால் வணங்கி யேத்த நந்திமா காள ரென்பார் நடுவுடை யார்கள் நிற்பச் சிந்தியா தேயொ ழிந்தார் திரிபுரம் எரிப்பர் போலும் அந்திவான் மதியஞ் சூடும் ஆவடு துறைய னாரே.
பானமர் ஏன மாகிப் பாரிடந் திட்ட மாலுந் தேனமர்ந் தேறும் அல்லித் திசைமுக முடைய கோவுந் தீனரைத் தியக் கறுத்த திருவுரு வுடையர் போலும் ஆனரை ஏற்றர் போலும் ஆவடு துறைய னாரே.
பார்த்தனுக் கருள்வர் போலும் படர்சடை முடியர் போலும் ஏத்துவார் இடர்கள் தீர இன்பங்கள் கொடுப்பர் போலுங் கூத்தராய்ப் பாடி யாடிக் கொடுவலி யரக்கன் றன்னை ஆர்த்தவாய் அலறு விப்பார் ஆவடு துறைய னாரே.
இத்தலம் சோழநாட்டிலுள்ளது. சுவாமிபெயர் - மாசிலாமணியீசுவரர், தேவியார் - ஒப்பிலாமுலையம்மை.